Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - 18











என்ன இது ? இப்படி திரும்பிக்கூட பார்க்காமல் போய்விட்டானே .இன்னும் கோபம் குறையவில்லையா .தவித்தபடி அவன் சென்ற திசையை பார்த்தபடி நின்றிருந்தாள் சபர்மதி .

"எல்லோரும் போங்க .நான் சபர்மதியிடம் கொஞ்சம் பேச வேண்டும் ."சத்யேந்திரன் .

அனைவரும் விலக " உட்காரும்மா " என்றார் .ஏனோ இப்போது அவரை மறுக்க தோன்றவில்லை சபர்மதிக்கு .தலை குனிந்தபடி அவர் முன் அமர்ந்தாள் .எப்படி ஆரம்பிக்க என தெரியாமலோ என்னவோ சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார் .

" மதிம்மா உன்னிடம் நிறைய சொல்லனும்டா .எப்படின்னு ...நான் இதைப்பற்றி.... உன்னிடம் ...தடுமாறினார் .

" எங்கள் அம்மா பட்ட துயரங்களை அருகிருந்து பார்த்தவள் நான். அதனால். இப்போது கூட அதற்கு காரணமான உங்களை அப்பா என அழைக்க என் நாக்கு புரள மறுக்கிறது ."

" ம்...புரிகிறது ...
என்னோட கதையில் பூரணசந்திரனுடனான உன் வாழ்க்கை சிறிது இருக்கிறது .அதனால் நான் எங்களிலிருந்தே தொடங்குகிறேன் .நான் தமயந்தியை சந்தித்த போது ராஜன் அம்சவல்லியின் வயிற்றிலிருந்தான் .
காதலென்பதையே அறியாது வெறுமனே இரு பணப்பெட்டிகளுக்கு நடந்த திருமணம் எனக்கும் அம்சவல்லிக்குமானது .ஏதோ ஓர் வெற்று வாழ்வு வாழ்ந்த எனக்கு அடர்கானக தீபமாக தோன்றினாள் தமயந்தி .

அம்சவல்லியின் உறவினர் வீட்டிற்காக உங்கள் அம்மா கிராமத்திற்கு வந்தோம் .அங்கே திருவிழாவில் உன் அம்மா பரதம் ஆடினாள் .நான் அதற்கு தலைமை ஏற்றேன் .அவள் பாதங்களின் ஒவ்வோரு தாளத்திலும் நானும் சேர்ந்து மிதிபடுவதாக உணர்ந்தேன்.காதல் என்ற  உணர்வை அணு அணுவாய் உணர்ந்தேன் .

அவளுக்கும் என்னிடம் அதே உணர்வு .பின்னால் என்னிடம் இதனை சொன்னாள் .அந்த சிறு கிராமத்தில் பிறர் கண்ணில் படாமல் அதிக நாட்கள் எங்கள் காதல் நிலா வளரவில்லை .எங்கள் இருவர்  வீட்டிற்கும் இந்த காதல் லேசாக கசிய ஆரம்பிக்க , நான் மணமானவன் என்ற உண்மை தமயந்திக்கு தெரியவந்தது .

" அதைக்கூறாமலேதான் என் அம்மாவிடம் பழகினீர்களா " இடையிட்டாள் சபர்மதி .

குற்றவுணர்வுடன் தலையசைத்தார் சத்யேந்திரன் ." ஆனால் தெரிந்த பின்னும் தமயந்தியால் என்னை பிரிய முடியவில்லை. எங்கள் காதலின் பலம் அது " மெலிதான பெருமிதம் சத்யேந்திரன் குரலில் .

" சீச்சி ...இதில் என்ன பெருமை ....வயிற்றில் பிள்ளையோடு இருந்த உங்கள் மனைவிக்கு துரோகம் செய்திருக்கிறீர்களே ? இந்த பாவம் சும்மா விடுமா உங்களை ..."

" உண்மை பாவம்தான் அது என்னை சும்மா விடவில்லை. அதனால்தான் இப்படி இருக்கிறேன்" என்றபடி தனது விளங்காத கை கால்களை பார்த்துக்கொண்டார்.

"என் அம்மாவையும் அந்த பாவம் சும்மா விடவில்லை. எத்தனையோ துயரங்களை அவர்களும் அனுபவித்து விட்டார்கள் ." கண்கலங்கினாள் சபர்மதி .

தலையசைத்து ஆமோதித்தார் சத்யேந்திரன் " ஆனால் நீ என்னம்மா பாவம் செய்தாய் .உனக்கு ஏன் இந்த துயரங்கள். எங்கள் தவறுக்கு நீ என்னடா கண்ணா செய்வாய் " தழுதழுத்தார் .

" உங்களைப் போன்ற பாவிகளுக்கு மகளாக பிறந்தேனே அதுதான் " வெடுக்கென கூறினாள் .

மௌனமானார் சத்யேந்திரன்.மனதின் வலி விழி வழியே இறங்கியது .சபர்மதிக்கும் இப்போது வலித்தது .
தலையை திருப்பியபடி" அப்புறம் ...." என்றாள்.

ஒரு பெருமூச்சுடன் " ம்...யாருக்கும் தெரியாமல் ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். ஒரு வருடம் ஆந்திர எல்லையோரம் ஒரு கிராமத்தில் வாழ்ந்தோம் . பணம் இல்லை.அன்றாட  உணவுப்பாடு மட்டுமே ஓடியது .ஆனாலும் உலகத்தை ஆளும் சக்கரவர்த்தி மன நிலையில் இருந்தேன் அப்போதெல்லாம் .என் வாழ்வில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டிய தினங்கள் அவை .எங்கள அன்பின் பரிசாக நீ பிறந்தாய் .வாழ்வு மேலும் சுவாரசியமாகவே சென்று கொண்டிருந்தது .

என்னையும் , தமயந்தியையும் தேடி அம்சவல்லி வீட்டினர் வந்து விட்டனர் .கையில் தர்மனை பிடித்தபடி , இடுப்பில் ராஜனை சுமந்தபடி " எனக்கு என்ன பதிலென்று வந்து நின்ற அம்சவல்லியை பார்த்ததும் தமயந்தி உடைந்து விட்டாள் .தான் ஒதுங்கிக்கொள்வதாக அவளுக்கு வாக்களித்து விட்டு , நான் உயிருடன் இருக்கும் வரை என்னை வந்து பார்க்க கூடாது . உயிரை விட்ட பின் என் மகளை உங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு , என்னை விட்டு அவள் அண்ணனுடன் சென்று விட்டாள் .

உன் அன்னை இறந்த விபரம் எனக்கு ஒரு வருடம் கழித்துதான் தெரிய வந்தது .உன்னைத்தேடி உன் தாய்மாமன் வீடு வந்த போது , நீ இல்லை .கேட்டபோது ....சற்று தடுமாறினார் சத்யேந்திரன் .

எதுவோ மனதை பிசைய " என்ன என்ன கூறினார்கள் ..." என கேட்டாள் சபர்மதி .

" உன் அம்மாவைப்போன்றே நீயும் யாருடனோ ...." முடிக்கும் முன் குரல் உடைந்தது சத்யேந்திரனுக்கு .

என்ன மனிதர்கள் இவர்கள் .நாளெல்லாம் அன்னையின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு என்ன அநியாயம் செய்திருக்கிறார்கள் ...உள்ளம் கொதித்தது சபர்மதிக்கு .

" நான் அதை நம்பவில்லை .எங்கோ மும்பை போய்விட்டதாக கிடைத்த தகவலோடு அங்கு போனேன் .பிறகு கர்நாடகா , ஆந்திரா ...பத்து வருடங்கள் தொழிலை விட இதைத்தான் பார்த்தேன் .நீ கிடைக்கவில்லை "

உண்மை பெருந்தேவியுடன் இந்த எல்லா இடங்களுக்கும் சுற்றியிருக்கிறாள் சபர்மதி .எல்லா மொழி டிவிகளிலும் சிறிது தலை காட்டிக்கொண்டிருந்தாள் பெருந்தேவி அப்போது .சபர்மதியின் இருபதாவது வயதில் சென்னை வந்தார்கள் .இப்போது சபர்மதிக்கே வாய்ப்புகள் வர ஆரம்பிக்க அப்படியே சென்னையில் செட்டிலாகி விட்டார்கள் .

"கடைசியாக சென்னை பற்றிய தகவல் கிடைத்து உன்னை பார்க்க வரலாமென எண்ணியபோது என் உடம்பு இப்படி ...." பலன்ற்ற தன் கை கால்களை பார்த்துக்கொண்டார் சத்யேந்திரன் ."நான் செய்த பாவங்களெல்லாம் என்னை துரத்த தொடங்கின .நான் மூலையில் முடங்கிவிட்டேன் ."

மனதில் பரிதாபம் தோன்ற " விடுங்க பாவங்களை அனுபவிக்கவும் ஒரு அளவுகோல் , அந்த முருகன் வைத்திருப்பான் .விரைவில் அது உங்களுக்கு முடிவுக்கு வந்துவிடும் " இன்னமும் அப்பா என அழைக்க நா வராவிடினும் ...ஆறுதல் சொல்ல மனம் வந்திருந்தது சபர்மதிக்கு .

ஆனால் தீவிரமாக தலையாட்டி அதனை மறுத்தார் சத்யேந்திரன் " இல்லைம்மா என் பாவங்களை அளக்க அளவுகோல் கிடையாது .எண்ணிலடங்காதவை அவை .உன் அன்னைக்கு , அம்சவல்லிக்கு இழைத்ததை விட அதிக பாவத்தை நான் ...பூரணசந்திரனுக்கு இழைத்திருக்கிறேன் "

அதிர்ந்து நோக்கி " என்ன சொல்றீங்க " என்றாள் .

அம்சவல்லியின் அன்னையும் , பூரணசந்திரனின் அன்னையும் அக்கா , தங்கை .உடன்பிறந்தவர்கள் இல்லை.கொஞ்சம் சுற்று வழி .பூரணசந்திரனின் தந்தை வணங்காமுடி .பெயருக்கு ஏற்றபடி கொஞ்சம் கறாரான ஆசாமி .வெளிப்போக்குக்கு உறவினரென்று தோளில் கை போட்டுக்கொண்டாலும் ,உள்ளே எங்களிருவருக்குமிடையே தொழில் போட்டி கனன்றுகொண்டே இருந்தது .
ஒரு முக்கியமான ஏலம் .இதனை எடுப்பவர்கள் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் வாய்ப்பு மட்டுமின்றி ஊருக்குள் மதிப்பு ,மரியாதை .எப்படியும் இதனை அடைந்தே ஆக வேண்டுமென்ற தீவிரம் எங்கள் இருவருக்குள்ளும் .குறிப்பிட்ட அந்த நாளில் நான் ஏலத்திற்காக  அவசரமாக சென்று  கொண்டிருந்தேன் .வழியில் ஒரு விபத்து .யாரென்று காரை நிறுத்தி பார்த்தால் வணங்காமுடி தான் .

இப்போது அவரை என் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை சென்றால் , ஏலம் போய்விடும் .எனக்கு முடிவெடுக்க இரண்டு நிமிடம் போதுமாக இருந்தது .ஏலம் நடக்கும் இடத்தை அடைந்ததும் ஆம்புலன்சுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு , சின்ன காயமாகத்தான் இருக்கும் என என்னை நானே , சமாதானம் பண்ணிக்கொண்டு ஏலத்தை வென்று திரும்பும்போது , வணங்காமுடியின் மரணசெய்தி என் காதுக்கு வந்தது .
நான் அவரைப்பார்க்காமல் சாலையிலேயே விட்டுவிட்டு போன விசயம் எப்படியோ கசிந்து ஊர் முழுவதும் பரவிவிட்டது .

அதன் பிறகு சுந்தரவடிவு அதாம்மா பூரணசந்திரன் அம்மா எங்கள் வீட்டை ஒதுக்கிவிட்டார்கள். ஆனால் அதன்பிறகு நன்றாக இருந்த தர்மன் தனது படிப்பை முடித்து தொழிலுக்குள் நுழையும் நேரம் அவனது மனது பாதிக்கப்பட்டது.அந்த கவலையோ உன்னைக் காணாத கவலையோ  எனக்கு உடல்நலம் இப்படியாகி  விட்டது .பொறுப்பேற்க பயந்து நெருங்கிய  சொந்தங்கள் கூட ஒதுங்கிக்கொள்ள தானே பொறுப்பேற்க வந்தான் பூரணசந்திரன்.

தன் அன்னையே தன்னை அனுப்பியதாக சொன்னான் .அவன் மட்டும் வராவிடில் நம் குடும்பம் இப்போது இருக்குமிடம் தெரியாமல் அழிந்திருக்கும்.ஒருநாள் பூரணனிடம் மன்னிப்பு கேட்பதற்காக ஆரம்பித்த போது , " விடுங்க மச்சான் குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை " என்றான் .கடவுள் எனக்கு அளித்த தண்டனையிலேயே கொடுமையான தண்டனை எந்த உயிரை அலட்சியப்படுத்தி நடுரோட்டில்
போட்டு விட்டு வந்தேனோ , அந்த உயிரின் குடும்பம்தான் இன்று என் குடும்பம் தாங்கும்படி செய்தது .

என் கவலையறிந்து உன்னையும் அழைத்து வந்தான் .எப்படியும் உன்னை சமாதானம் செய்து பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைத்துவிட்டு தனது நெடுநாள் கனவான இந் த பயணத்திற்கு செல்லப்போவதாக சொல் லிக்கொண்டிருந்தான் .

அன்று திடீரென வந்து உன்னை மணக்க போவதாக சொன்னதும் நான்  மகிழ்ச்சியில் என்ன சொல்ல என்றே தெரியாமல் தவித்து கொண்டிருக்கையிலேயே , நீ அவனுடன் சண்டை போட்டு விட்டாய் .
அன்று போனவன் தொழிலை மட்டும் பார்த்துக்கொண்டு வீட்டிற்கு வராமல் வெளியேயே இருந்து விட்டான் .
" மதிம்மா பூரணனை போல் ஒரு நல்ல மாப்பிள்ளை ...."

"அவர் எங்கே போகப்போகிறார் அப்பா ?" சபர்மதி மெல்ல கேட்டாள் .

ஒரு சிறு சொல்லுக்கு இவ்வளவு சக்தி இருக்க முடியுமா ?....கண்கள் கலங்கி ..நாக்குழறி கண்ணீர வழிய தொடங்கியது சத்யேந்திரனுக்கு ...
" எ...எ..என்..என்ன...ம்...மா ...என்று அவர் குழற , தண்ணீர் தந்து அவரை ஆசுவாசப்படுத்தினாள் சபர்மதி .

" அப்பா ...அன்பாக அவரை வருடியபடி சொன்னாள் நீங்கள் செய்த பாவத்திற்கெல்லாம் வேண்டு மட்டும் தண்டனை அனுபவித்து விட்டீர்களப்பா .இனி அனுபவித்த தண்டனைகளுக்கான சமன்கள்தானப்பா உங்கள் வாழ்வில் அதனை உங்கள் மகளாக கண்டிப்பாக நான் உங்களுக்கு கொடுப்பேன் .நம் வீட்டை , தொழிலை, சித்தியை , அண்ணன்களை அனைவரையும் இனி நான் பார்த்துக்கொள்கிறேனப்பா." என்றவள அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து

" அப்பா இத்தனை பெரிய வேலையை நான் பூரணனுடன் இணைந்து செய்ய விரும்புகிறேனப்பா " என்றாள் சபர்மதி கன்னங்கள் கனிய ..தன் காதலை மறைமுகமாக தகப்பனிடம் வெளிப்படுத்தினாள் .

" என் கண்ணே " என அவளை குனிந்து உச்சி முகர்ந்தார் சத்யேந்திரன் .

" செய்டா கண்ணம்மா நீயும் , உன் கணவனுமாக இந்த பாவப்பட்ட அப்பனின் குடும்பத்திற்காக , உங்கள் இருவருக்கும் நான் செய்த பாவங்களை மறந்து நன்மை செய்யுங்கள் கண்மணிகளா !...அதை விட இந்த தகப்பனுக்கு பெரிய தண்டனை இல்லையில்லை இது பாக்கியம் .இந்த பாக்கியத்தை இந்த பாவிக்கும்  தர நினைக்கிறீர்களே ...நீங்கள் இருவரும் நூறாண்டு காலம் வற்றாத செல்வத்தோடு வாழ்வாங்கு வாழ்வீர்களம்மா "என வாழ்த்தினார் .

" பூரணன் என்ன செய்யப்போகிறாரப்பா . எங்கோ போகப்போவதாக ....." என்று இழுத்தாள் சபர்மதி .

பெருமை மின்னியது சத்யேந்திரன் முகம் ." என் மாப்பிள்ளையை சாதாரண ஆளாக எண்ணி விடாதேம்மா .அவர் மிக விரைவில் உலக புகழ் பெற போகிறார் .அவர் ஒரு புது வகை மருந்து கண்டுபிடித்திருக்கிறார் .அதனை வெளிநாடு முழுவதும் பரப்ப போக போகிறார் .கிட்டதட்ட உலகம் முழுவதும் ."

" அப்பா எனக்கு புரியவில்லை "

" அதாவதும்மா நம் பகுதிகளில் ஒரு வகை மூலிகை விளைவதை , தற்செயலாக கண்டுபிடித்திருக்கிறார் பூரணன் .அதன் நன்மைகளை ஆராய்ந்தால் ...தற்போது மருந்தில்லா சில உயிர்கொல்லி நோய்களுக்கானமருந்துகள் அதிலிருப்பதை கண்டிருக்கிறார். சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகின இதனை உறுதிபடுத்தி கொள்ள .

இதனை அரசாங்கத்திடம் தெரியப்படுத்த சென்ற போது பிரச்சினை வந்தது .நம் நாட்டு அரசியலமைப்புதான் உனக்கு தெரியுமே அம்மா .ஒரு மந்திரி இந்த மருந்து விபரம் தெரிந்து இதன் பார்முலாவை எப்படியாவது பூரணனிடமிருத்து வாங்கி , தானே மருந்திற்கான உரிமம் பெற எண்ணினார் .

அதனால் பூரணன் தன்னுடன் படித்த ஒருவரின்  தந்தை , அவரும் மந்திரிதான் .அவர் உதவியை நாடினார் .ஆனால் அந்த மந்திரி இந்த மருந்து தனக்கு கிடைக்காத ஆத்திரத்தில் , கவர்னர் , பிரதமர் வரை எதையோ சொல்லி இந்த மருந்திற்கு தடை வாங்கி விட்டார் .

இப்போது நம் மந்திரி ஒரு ஆலோசனை சொன்னார் .அதாவது இந்த மருந்தை உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும் கொண்டு சேர்க்க வேண்டும் இனாமாக .அதனை உபயோகித்தவர்கள் மேலும் அதற்காக நம் அரசாங்கத்தை நெருக்குகையில் அரசாங்கம் மூலையில் தூக்கி போட்ட அந்த மருந்து தயாரிப்பை தூசு தட்டி எடுத்தே ஆக வேண்டும் .

எந்த நன்மையாக இருந்தாலும் வெளிநாட்டவர் மூலம் வந்தால்தானே நம் நாட்டினர் அதற்கு மதிப்பு கொடுக்கின்றனர்.எனவே இப்படி ஒரு திட்டம் .

இதுவே பூரணன் மற்றும் நம் மந்திரியின் திட்டம் .இந்த மருந்தின் மகத்துவத்தை  கிட்டதட்ட உலகம் முழுவதும் பரப்ப , அனைத்து விபரமும் அறிந்த பூரணன்தான் செல்ல வேண்டியிருக்கிறது .

அந்த பயணம் எத்தனை நாட்கள் நீடிக்குமோ தெரியவில்லை .பூரணன் அநேகமாக அடுத்த வாரம் கிளம்புவார் என நினைக்கிறேன் " மிகப்பெரிய விளக்கம் சொல்லி முடித்தார் சத்யேந்திரன் .

எவ்வளவு பெரிய விசயம் .எவ்வளவு அறிவாளி பூரணன் .இவனை புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்தோமே .வருந்தினாள் சபர்மதி .

" அப்பா ...நான் ...நாளை அவரை பூரணனை போய் ...பார்த்து விட்டு வரட்டுமா ..." தயங்கி தயங்கி அனுமதி கேட்கிறாள் .

ஆதரவாக தலை வருடுகிறார் தகப்பன் " கண்டிப்பாக போய் பாரம்மா .பூரணன் காலை ஏழு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு வெளியேறி விடுவான் .அவனுக்கு பல வேலைகள் .மீண்டும் ஒரு பன்னிரென்டு மணியளவில் வீடு திரும்பி தாயுடன் மதிய உணவு உண்ணுவது வழக்கம் .அப்போது நீ அவர்கள் வீட்டிலேயே சென்று அவர்களை பார் .அதுதான் சரியாக இருக்கும் " என்றார் .

மனம் நிறைய மகிழ்ச்சியுடன் தன் மனம் நிறைந்தவனை மறுநாள் சந்திக்க போகும் ஆசையுடன் பல இன்பக்கனவுகளுடன் அன்றைய இரவைக் கழித்தாள் சபர்மதி .

ஆனால் இன்பம் என்பதனை நீ அடைய இன்னமும் சில காலம் கிடக்கு கண்ணே என்பதனை சொல்லாமல் சொல்லியபடி மறுநாள் பொழுது அவளுக்காக சிவப்பாக விடிந்தது .


                                            தேவதை வருவாள்                                 

1 comments:

  1. Hi Padma,

    Please check & fix Vanavil Devathai links 16 & 17

    In 16, "Sorry, the page you were looking for in this blog does not exist." message is shown whereas in 17, the link for part 16 is given. And we are missing part 17.

    Thanks

    ReplyDelete

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll