Pages

Powered by Blogger.

வானவில் தேவதை - பகுதி 15 , 16 , 17 .18.

பதினைந்து




பைத்தியமா
இவனுக்கு? நினைத்தது நடக்கவில்லையென்றால் இப்படி ஆகி விடுவானா ? லூசு ...லூசு ...இவனை. ..மேலே வந்து பார்த்துக்கொள்கிறேன் .அவசரமாக நீந்தி மேலே வந்து பார்த்தபோது அவனில்லை .வாசலில் அவன் கார்  கிளம்பும் ஓசை கேட்கவே , அப்படியே பக்கவாட்டு வழி வழியாக ஓடி முன்பக்கம் வந்து பார்த்த போது அவன் கார் சுற்றுச்சுவர் தாண்டி வெளியேறிக்கொண்டிருந்தது .

சை ...இப்படி ஒரு லூசுப்பயலிடம் வந்து மாட்டுவேனா ? இந்த வீட்டில் எத்தனை லூசுன்னு தெரியலை. அந்த தர்மன் பைத்தியத்தோட காத்து இவன் மேல பட்டிடுச்சு போல ...தனக்குள் பொறுமியபடியே , உடை மாற்றுவதற்காக மாடியேறியவளின் வழியை மறித்தான் தர்மசேகரன் .விலகி செல்ல முயன்றாள் .மீண்டும் வழி மறைத்தான் .

" என்ன ..." என்றாள் எரிச்சலுடன் .

பதிலே சொல்லாமல் அவளையே பார்த்தபடி இருந்தவன் கைகளை விரித்தான் .அவளை ஆரத்தழுவுபவன் போன்ற பாவனையில் நெருங்க பயந்து " ஏய் என்ன பண்றீங்க ?"  கத்தினாள் .

" தங்கச்சி " நாடக பாணியில் அழைத்து கைகளை விரித்தான் .தலையை மடெரென்று அந்த மாடிப்படி கைவளைவில் முட்டிக்கொள்ள வேண்டும்போல் இருந்தது சபர்மதிக்கு .நேற்று அனுசூயா சொன்னது நினைவு வந்தது. " அவருக்கு நீ அவருடைய தங்கை. உனக்கு எல்லா உதவியும் செய்யனும்னு சொல்லிக்கொடுத்திருக்கேன் சபர்மதி .இனி பாரேன் அவர் உன்னை நல்லா பார்த்துக்கிடுவார் ." இப்படி கூற , ஆமாமா எனக்கு இப்ப்ப்புடி .....ஒரு அண்ணன் அவசியம்தான் .என்று மனதில் எண்ணினாள் வெளியே புன்னகை பூசிக்கொண்டு .

முருகா ..இவனுக்கு தங்கை பாசம் பொழிய வேறு நேரம் கிடைக்கவில்லையா ...அம்மலைப்பிரதேசத்திற்கே உரிய குளிர்... தண்ணீரில் நனைந்திருந்த அவள் உடலை நடுக்க தொடங்கியது .
" என்னம்மா குளிருதா ...இப்ப எதுக்கு மழையில் நனைந்தாய்...சரி  விடு அண்ணன் பார்த்துக்கிறேன் ..." என்றவன் அங்கிருந்த சோபா கவரை எடுத்து அவள் தலையை துவட்ட தொடங்கினான் . கூடவே சோபா விரிப்பு எடுத்து மேலே மூடி வேறு விட்டான் .

பொறுமையிழந்து " அனுசூயா " எனக் கத்தினாள் சபர்மதி . வேகமாக ஓடி வந்தாள் அனுசூயா .
" என்ன சபர்மதி "

அவன் பக்கம் கையை சுட்டி " என்ன சொல்லி வச்சு தொலைந்தாய் .பாரு "என்றுவிட்டு தன்மேலிருந்த விரிப்புகளை விசிறிவிட்டு மாடியேறினாள் .

ஈர உடையை கலைந்து சற்று நேரம் ஹீட்டர் முன் நின்றதும்தான் உடல் நடுக்கம் குறைந்தது. சூடாக ஒரு கப் காபி குடித்துவிட்டு வரலாமென கீழே இறங்க போனவளின் கை தன்னிச்சையாக பாக்கெட்டில் கைபேசியை தேடியது.. அவளுடைய சுடிதார்கள் எல்லாவற்றிலுமே கைபேசிக்கென ஒரு பையை தைத்து வைப்பதுண்டு.காணவில்லையே எங்கே ....கடவுளே ...இப்போதுதான் சபர்மதி உணர்ந்தாள் .

வேகமாக நீச்சல் குளத்தை அடைந்தாள் . லூசு பூரணசந்திரனில்லை ...அவள்தான் சபர்மதிதான் . வேண்டுமென்றே திட்டம் போட்டு நீச்சல்குளத்திற்கு வர வைத்து , அவள் கால்களை இடறி உள்ளே தள்ளி விட்டு ....இவனை ...இவனை ...

மீண்டும் உள்ளே குதித்தாள் சபர்மதி 
அவள் எண்ணியது போலவே எந்த எதிரொலிப்புமின்றி மிக அமைதி காத்தது அவள் குளத்திலிருந்து எடுத்த செல்போன்.மீண்டும் அவளது நட்புகளிடம் இருந்து விலக்கி வைக்கப்பட்டு விட்டாள் சபர்மதி .

ஆத்திரமென்றால் அப்படி ஒரு ஆத்திரம் சபர்மதிக்கு .இப்போது பூரணசந்திரன் மட் டும் எதிரிலிருந்தால் , கத்தியெடடுத்து குத்தவே செய்திருப்பாள் . வாடா ...நீ ...வா ..உன்னை ....பற்களை கடித்தபடி அவனுக்காக காத்திருக்க அவனோ நான்கு நாட்களாக 'சோலைவனம் ' பக்கமே எட்டி பார்க்கவில்லை.

எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு வருவான் ...மனது உறுத்திக்கிட்டு இருக்கும் .அதனால்தான் வராமல் இருக்கிறான் .என்றாவது ஒருநாள் வந்துதானே தீரணும்.அன்னைக்கு வச்சிக்கிறேன்னு அவனை ...தனக்குள் கறுவியபடி அவன் வரவை தினம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் சபர்மதி .

தினமும் காலை தோட்டத்தில் சபர்மதி நடக்கும் போது , அனுசூயா அல்லது அம்சவல்லி துணையுடன் சக்கர நாற்காலியில் உலா வரும் சத்யேந்திரன்  இன்றாவது பேசுவாயா...என்ற ஏக்கத்துடன் பார்க்கும் பார்வை அவளை என்னவோ செய்தது. பொறுத்து பார்த்துவிட்டு காலை நடையை நிறுத்தி விட்டாள் .

வீட்டினுள் தர்மனின் தொல்லை வேறு .அவனுக்கு திடீரென தங்கை மீது அபரிதமான பாசம் பொங்கி வந்திருந்தது .தங்கச்சி காபி குடி , தங்கச்சி சாப்புடு, கால் வலிக்கும் உட்காரு, ரொம்ப டிவி பார்க்காதே கண் கெட்டுடும் ...இப்படி தேவையில்லாத நேரங்களில் தன் பாச உணர்வை ஏடாகூடமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் இவளது பார்வையில் அனுசூயா " இல்லை சபர்மதி நான் அன்று சொன்னதோடு சரி. அதையே பிடித்துக்கொண்டு அவராகத்தான் இப்படியெல்லாம் செய்கிறார் " என்றாள் ." சரி விடு " என சபர்மதி சொல்ல வேண்டியதானது .

அம்சவல்லி இவளை இப்படி ஒரு ஜீவன் இந்த வீட்டில் இருக்கிறது என்ற உணர்வேயின்றி , வீட்டை சுற்றி காவல் காக்கும் நாய்களை பார்க்கும் பார்வையால் எப்போதும் பார்ப்பாள் .ராஜனுக்கு என்ன ஆனதோ ...அதன்பின் கண்ணிலேயே படவில்லை. அப்படியே பார்க்க நேரிட்டாலும் ஒரு தலையாட்டலுடன் நகர்ந்து விடுகிறான் .

இவர்களையெல்லாம் நான் உறவென்று ஏற்க வேண்டுமாம் 
வரட்டும் அந்த பூஊஊரணன் ...அவனை நன்கு நாலு வார்த்தை கேட்கிறேன் .ஆனால் இன்றோடு மூன்று நாட்களாகி விட்டதே .நாளையாவது வருவானா .. ?

வந்தான் ஆனால் மேலும் சபர்மதியை கொதிக்க வைக்கும் செய்தியுடன் வந்தான். எப்பொழுதும் உள்ளே நுழைந்தவுடன் பூரணன் போகும் இடம் .சத்யேந்திரன்தான் .அன்றும் அதுபோல் அவுட்ஹவுஸ் நோக்கி நடந்தவனை இடைமறித்தாள் சபர்மதி. அவள்தான் வீட்டினுள் அவன் கார் நுழையவுமே இங்கே வந்து காத்துக்கொண்டு இருக்கிறாளே .
அவன் அந்த ஓரம் திரும்பும் போதே பாதி வழியில் வந்து மறித்தபடி நின்று கொண்டாள் .இன்று இவனை விடப்போவதில்லை.

பாதி வழியில் அவளைக் கண்டவன் முகம் பூவாய் மலர
" என்னம்மா எனக்காக ரொம்ப நேரமாக காத்திருக்கிறாய் போல ?
நடையை சிறிதும் தளர்த்தாமல் நடந்தபடியே கேட்டான் .

" ஆமா இந்த அழகு மன்மதனை பார்க்காமல் நான்கு  நாட்களாக என் கண்கள் பூத்துக்கிடக்கிறது." நக்கலடித்தாள் சபர்மதி.

" ம்...அப்போ ஒரு போன் போட்டிருக்கலாமே டார்லிங் .மாமா ஓடி வந்திருப்பேனே. " நடையை நிறுத்தாமல் நடந்தபடி சபர்மதியை நோக்கி கண்சிமிட்டினான்.

ஏற்கெனவே நிற்காமல் நடக்க தொடங்கிவிட்ட அவனுடன் வேறு வழியின்றி நடக்க ஆரம்பித்திருந்த சபர்மதிக்கு எரிச்சல் உச்சிக்கு போனது .கண்றாவி இவன் மூஞ்சியை பார்க்கத்தான் இங்கே நின்றேனாக்கும். இவன்கிட்ட பேசலாம்னு நின்றால் ..அப்போதுதான் அந்த நீச்சல்குள சம்பவத்திற்காக பூரணனை வாங்கு வாங்கென்று வாங்க வேண்டுமென்ற தன் முடிவு சபர்மதிக்கு வர , அவனோடு சேர்ந்து நடந்து கொண்டிருந்தவள் நின்றாள் .

நடை வேகத்தை சிறிது குறைத்து அவளை நோக்கி " என்ன "என்றான் .
" அன்னைக்கு ஏன் அப்படி பண்ணீங்க ?" குரலில் கண்டிப்பு கலந்து கேட்டாள் .

" அதை கேட்க  ஏன் நிற்கிறாய் ...வா நடந்து கொண்டே பேசலாம்"

" இல்லை எனக்கு பதில் சொல்லிவிட்டு ..." சொல்லிக்கொண்டிருந்தவளின் கரத்தை பற்றி இழுத்து " அதுதான் டார்லிங் நமது காதல் மொழிகளை எல்லாம் நடந்தபடியே பேசுவோம். ஏனெனில் எனக்கு நேரம் கொஞ்சம்தான் இருக்கிறது " சொல்லியவன் அவள் கைகளை பற்றி அவளை கிட்டதட்ட தன்னோடு இழுத்துக்கொண்டு நடக்க தொடங்கினான்.

" விடுங்க இப்போ சொல்லப்போறீங்களா இல்லையா...அன்று ஏன் அப்படி செய்தீர்கள் ?" கேட்டபடி அவனுடன் இழுபட்டபடி நடந்தாள் .

" இன்னுமா அது உனக்கு புரியவில்லை ?" கேலியுடன் கேட்டான் ." ஏன்னு தெரியுது...அது எதற்காகன்னுதான் கேட்கிறேன் ..." அழுத்தமாக கேட்டாள் சபர்மதி .

" சொல்றேன் செல்லம் ...அதை விளக்கத்தானே வந்திருக்கேன் ."

" முதலில் இந்த டார்லிங் ...செல்லத்தையெல்லாம் விட்டுவிட்டு சாதாரணமாக பேசித்தொலையுங்கள் "

" ஆஹா என் கண்மணி யை நான் கொஞ்சக்கூடாதா ?"

எப்படியும் கூப்பிட்டு விட்டு போ என்று பேசாமல் இருந்திருக்கலாம்.இவன் அடங்கமாட்டான்.செய்யாதே என்றால் செய்வான்.இப்போது புதிதாக கண்மணியை சேர்த்திருக்கிறான். வேறு எதுவும் சொன்னால் அடுத்து ஒரு வார்த்தை சேர்ப்பான் .அது இந்த வார்த்தைகளை விட கண்றாவியாக இருந்து தொலையும் .எனவே அந்த பேச்சை விட்டுவிட்டு தனது பிரச்சினைக்கு வந்தாள் .

"அன்று எனக்கு நீச்சல் தெரியாமல் எவ்வளவு சிரமப்பட்டு மேலே வந்தேன் தெரியுமா " குரலில் சிறு தளுதளுப்பை கொண்டுவந்தாள் .

" உனக்கு நீச்சல் தெரியுமென்று எனக்கு தெரியும் "

" அதெப்படி தெரியும் ..."

" உன் ஜாதக காப்பி ஒன்று கூட  வைத்திருக்கிறேன் .பார்க்கிறாயா ? நம் இருவருக்கும் பத்து பொருத்தம் முத்தாக பொருந்தியிருக்கிறது தெரியுமா ?"மீண்டும் கண்களை சிமிட்டினான்.

இவனிடம் போய் எப்படி தெரியுமென்று கேட்டேன் பார் .இவன்தான் என்னை வேவு பார்க்கவே ஒரு ஆளை சம்பளம் கொடுத்து வைத்தவனாயிற்றே.தன்னையே நொந்து கொண்டாள் சபர்மதி.


" அப்படி என் நட்புகளை துண்டிப்பதில் உங்களுக்கு என்ன லாபம் ?"

" லாப நஷ்ட கணக்குகளெல்லாம் பெரியவர்களை வைத்துதான் பேசவேண்டும் .வா உன் தந்தையை வைத்தே பேசுவோம். " அவுட்ஹவுஸ் வாசல் வரை வந்துவிட்டவன் அவளை உள்ளே இழுத்தான் .

கால்களை தரையில் அழுத்தமாக ஊன்றி நின்றவள் " அங்கெல்லாம் நான் வர மாட்டேன்" உறுதியாக நின்றாள் .

" வேண்டாம் நானே தூக்கிக்கொண்டு செல்கிறேன் " என்ற கூறியவன் தொடர்ந்து அதற்கான செயல்களிலும் இறங்க முனைய அவசரமாக சாத்தி வைத்திருந்த கதவுகளை திறந்து தானே அவுட்ஹவுசினுள் நுழைந்தாள் சபர்மதி .

கோடி சூரியன்கள்  பிரகாசித்தன சத்யேந்திரனின் விழிகளில் சபர்மதியை காணவும் ." கண்ணம்மா வாடா....கைகளை ஆவலாக நீட்டினார் .

ம்க்கும் இவரைப் பார்க்கத்தான் இப்போ வந்து நிற்கிறேனாக்கும் .
சக்சக்கென்று தன் பாதங்களை வைத்து நடந்து சன்னலோரமாக கிடந்த நாற்காலியை விருட்டென்று சன்னல் புறமாக திருப்பி போட்டுக்கொண்டு அவர்கள் இருவருக்கும் முதுகு காட்டியபடி அமர்ந்து கொண்டாள் சபர்மதி .

தாயிடம் கோபம் கொள்ளும் செல்லப்பிள்ளையை பார்க்கும் பார்வை பார்த்தனர் ஆண்கள் இருவரும் .காபி பயிர் , விளைச்சல் , வாழைத்தோப்பு என அவளுக்கு புரியாத விசயங்கள் சிறிது நேரம் பேசினர் .

பின் அவளை நோக்கி " சபர்மதி ஒரு நிமிடம் " என்றான் பூரணசந்திரன் .
" என்ன " என்றாள் திரும்பாமலேயே .

" இந்த தொழில் விசயங்களையெல்லாம் நீயும் கொஞ்சம் கற்றுக்கொண்டால்  எனக்கு உபயோகமாக இருக்கும் "

" எதற்கோ ...."

" என்றைக்கிருந்தாலும் நம் குடும்ப தொழிலை நாம்தானே பார்க்க வேண்டும் "

" யார் குடும்பத்தையோ யார் தொழிலையோ நான் ஏன் பார்க்கவேண்டும் "

" யாருடையதையோ அல்ல ...உன் குடும்பத்தை ...." அழுத்தினான்  பூரணசந்திரன்.

நாற்காலியில் திரும்பி அமர்ந்து அவர்களிருவரையும் நோக்கி தெளிவாக " எனக்கு இந்த ஊரில் அம்மா , அப்பா , அண்ணான்னு எந்த உறவும் இல்லை .ஒரு குடும்பமும் இல்லை .யாரையும் பார்க்கனுங்கிற அவசியமும் எனக்கில்லை " சத்தமாக அறிவித்தாள்.

கருமை பூத்துவிட்ட சத்யேந்திரனின் முகத்தை சிறு திருப்தியுடன் பார்த்தாள்.

" உன் கணவன் குடும்பத்தாருடன் கூடவா ..."அமைதியாக வினவினான் பூரணசந்திரன்.

" என்னது கணவனா..அது யார் ..." புரியாமல் கேட்டாள் சபர்மதி .

ஆவலாக நோக்கிய சத்யேந்திரனிடம் ஒப்புதலாக தலையசைத்து விட்டு எழுந்து சபர்மதியிடம் வந்து அவள் இரண்டு கைகளையும் பற்றி அவளை எழுப்பினான் .சத்யேந்திரனின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி " உங்கள் மகளை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன் .அதற்கு உங்கள் சம்மதம் வேண்டும் மச்சான் "
என்றான் .

சொர்க்கத்தின் வாசலை எட்டி விட்ட சந்தோசம் தகப்பனின் முகத்தில் .ஆனால் தன் கைகளை பற்றியிருந்த கரங்களை பட்டென உதறினாள் சபர்மதி .

" யார் கல்யாணத்திற்கு யார் சம்மதம் கொடுப்பது ?எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமே இல்லை .அதுவும் நீங்கள்தான் மணமகன் என்றால் கடைசி வரை திருமணம் முடிக்காமல் கன்னியாகவே இருந்து விடுவேன் ." படபடவென பொரிந்தாள் .

மனக்கலக்கத்துடன் தன்னை நோக்கிய சதயேந்திரனுக்கு விழிகளாலேயே அபயமளித்தபடி " சபர்மதி இதில் விளையாட்டிற்கு இடமில்லை. இது நம் வாழ்க்கை.நான் தெளிவாகவே சொல்லிவிடுகிறேன் .நான் உன்னை மனமார விரும்பியே ....."

" என்னது காதலா உங்களுக்கா என் மீதா ...இதை நம்பும் அளவு நான் ஒன்றும் இளித்தவாய் இல்லை .நீங்கள் நினைத்ததை முடிக்க வேண்டும் உங்களுக்கு .அதற்குத்தானே இத்த காதல் , கல்யாணமெல்லாம் "

" என்ன நினைத்தது ..." முகம் இறுக கேட்டான் பூரணசந்திரன் .

"இதோ இந்த கை கால் விளங்காத மனுசன் , ஒரு முழு பைத்தியம் , ஒரு அரைப்பைத்தியம் , ஒரு அல்டாப்பு இத்தனை பேரையும் வச்சி ஒரு குடும்பம் .அதற்கு நான் இங்கே தங்கியிருந்து சேவகம் பண்ணனும் .அதற்கு எனக்கு தர்ற சம்பளம் இந்த கல்யாணம். கொடுக்கும் போனஸ் தாலிக்கயிறு .அப்படி ஒரு கேடு கெட்ட வாழ்க்கை எனக்கு தேவையில்லை .உங்களை பார்க்கவே எனக்கு பிடிக்கவில்லை. நீங்க கிட்ட வந்தாலே எனக்கு உடம்பெல்லாம் எரியுது .இந்த உலகத்திலேயே நான் அதிகமாக வெறுப்பது உங்களைத்தான்  "

தன்போக்கில் பேசிக்கொண்டிருந்தவளை கையுயர்த்தி நிறுத்தினான் பூரணசந்திரன் .

" உனக்கு பிடிக்காத வேலையை இனி நீ செய்ய வேண்டியதில்லை.நீ ...." என்றவன் போகலாம் என கையை ஆட்டினான் .

ஒரு நிமிடம் தயங்கி நின்றவளை " போ என்றேன் " குரலை உயர்த்தினான்.

மீண்டும் வீம்பு தலை தூக்க வேகமாக வெளியே வந்தாள் சபர்மதி .ஐந்தே நிமிடங்களில் வெளியேறிய பூரணனின் கார் பின்பு ' சோலைவனம்' வரவேயில்லை .


பதினாறு 


அன்றைய அச்சம்பவத்தின் பின் சத்யேந்திரன் அவளை சந்திக்க விரும்பி அடிக்கடி தூது விட்டுக்கொண்டு இருந்தார் .ஆனால் சபர்மதி அதற்கு சிறிதும் இடம் கொடுக்கவில்லை .ஏற்கெனவே அன்று பூரணசந்திரனிடம் அதிகம் பேசி விட்டோ மோ என்ற மன உளைச்சல் இருந்தாள். இதில் இவர் வேறு என்று அலுத்துக்கொண்டாள்.

முதலிரண்டு நாட்கள் பூரணனை பற்றி நினைக்காமலிருக்க முயன்றாள். மூன்றாவது நாள் அவன் அப்படியெல்லாம் அவன் அக்கா குடும்பத்தை விட்டு விட மாட்டானென்று நினைத்தாள். நான்காம்நாள் அவனால்தான் நான் வேலை பார்த்த சேனலாலும் , பெருந்தேவியாலும் தூக்கி எறியப்பட்டேன் என மனதுக்கு தனக்கு  தானே நினைவு படுத்திக்கொண்டாள் .ஐந்தாம் நாள் இந்த குடும்பத்துடன் என்னை சேர்க்க தாலி பிச்சை போட தயாரானான் , காதலெனும் பொய் சொல்லி ....பொய்தானே அல்லது இல்லையில்லை பொய்தான்  என உறுதி செய்து கொண்டாள். ஆறாம்நாள் எப்படியும் வருவான் மீண்டுமொரு முறை அவனுடன் தெளிவாக பேச வேண்டும் என எண்ணிக்கொண்டாள் .ஏழாம்நாள் ஒரு வாரமாயிற்றே ஒரு வேளை வர மாட்டானே என லேசாக கலங்கினாள் .

அன்று மதிய உணவின் பின் , சிறிது சோம்பலாக ஹாலில் இருந்த டிவியில் இலக்கின்றி சேனல்களை மாற்றி கொண்டிருந்தாள் .மெதுவாக 
அவளருகில் வந்து அமர்ந்தான் ராஜன் .

" ஹாய் சிஸ  என்ன பண்ற ?"

ராஜனுடன் வெளியே போய்விட்டு வந்த நாளன்று பூரணசந்திரன் இவனை அழைத்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். அதிலிருந்து ராஜன் சபர்மதியிடம் அதிகம் பேசுவதில்லை. நேரில் பார்க்க நேர்ந்தால் ஒரு அரைப்புன்னகையோடு சரி.

உன் மாமன் சொன்னான் என்று என்னிடம் பேசாமலேயே திரிந்தாயே ...இன்றென்ன ...என்று நினைத்தபடி , "பொழுது போகலை டிவி பார்க்கிறேன் " என்றாள் .

"ஓ...அப்போ நாம் கொஞ்ச நேரம் வெளியே போய்விட்டு வரலாமா ?"

சபர்மதி யோசித்தாள் ." ஒருமணி நேரத்தில் வந்து விடலாம் " என்றான் .

அம்சவல்லி வீட்டிலிருக்கும் நாட்களில் மதியம் இரண்டு மணிநேரம் தூக்கத்திற்கு போய் விடுவாள் .இன்றும் அறைக்குள் உறக்கத்திற்கு போய்விட்டாள் .தருமனுக்கு தூக்கத்திற்கு மருந்து கொடுக்கப்படுவதால் அவனும், நாளெல்லாம் அவனுடன் போராடுவதால் அனுசூயாவும் மதிய உணவுக்கு பின் சிறு தூக்கம் தூங்குவது வழக்கம் .எனவே வீடு மிக அமைதியில் இருந்தது .மற்றவர் எழும் முன் ராஜனோடு ஒரு ரவுண்ட் வெளியே போய் வந்தாலென்ன என்றெண்ணினாள் சபர்மதி .

மேலும் இனி ஒரு போனை அவளுக்கு தரக்கூடியவன் ராஜன்தான் .எனவே " போகலாமே. ..எனக் கிளம்பிவிட்டாள் "

காரை தயாராக செட்டிலிருந்து கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருந்தான் ராஜன் . " என்ன முன்பே எடுத்து வந்து விட்டீர்களா "  எனக் கேட்டபடி காரில் அமர்ந்துகொண்டாள் சபர்மதி .

" ம் ...என்றபடி காரை எடுத்தான் .அவளது மீடியா பற்றி அதிக விவரங்களை கேட்டபடி காரை செலுத்தினான் .சபர்மதியும் தனது அனுபவங்களை அவனுடன் பகிர்ந்து கொண்டாள் .
" என்னுடைய நண்பர்கள் சிலர் நீ ஒரு தொலைக்காட்சி நடிகை என்றதும் உன்னைக் காண மிக ஆவலுடன் இருக்கின்றனர் .அவர்களை சந்திக்கலாமா ? எனக்கேட்டான் .

" அன்று பார்த்தோமே அவர்களா ..."அவளுக்கு அன்று பார்த்தவர்களை பிடிக்கவேயில்லை .

" இல்லை இவர்கள் வேறு .. "

" ஓ...சரி பார்க்கலாம் "

பேச்சு சுவாரசியத்தில் கார் ஏதோ அடர்ந்த காட்டு பகுதிக்கு போவதை முதலில் கவனிக்கவில்லை சபர்மதி .

" எங்கே போகிறீர்கள் ...?"

" என் நண்பர்கள் இங்குதான் இருக்கிறார்கள் சிஸ். ..."

ராஜனின் மூன்று நண்பர்களும் மிக கண்ணிய தோற்றம் காட்டினர் .போட்டி போட்டுக் கொண்டு அவளுடன் பேசினர் .கை குலுக்கினர் .தாங்கள் அவளது ரசிகர்களென சொல்லிக் கொண்டனர் . அவளை அறிமுகம் செய்வித்ததற்காக ராஜனுக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர் .போட்டோ எடுத்துக்கொள்ள கேட்டபோது சபர்மதி சிறிது தயங்கினாள் .

" நம்ம நண்பர்கள்தான் சபர்மதி  ஒன்றும் பயமில்லை என்ற ராஜன் வா நானும் இருக்கிறேன் என அவளை தன்னருகே வைத்துக்கொண்டான் .அவனை ஒட்டி நின்று சில போட்டோக்களை விருப்பமின்றி எடுத்தாள் சபர்மதி .பிறகு ....

ஒரு போட்டோவின் போது அவளருகில் நின்ற ஒருவன் சட்டென அவளை அணைக்க முயல அவனைப் பிடித்து தள்ளி கன்னத்தில் அறைந்தாள் சபர்மதி .தொடர்ந்து அவனை பட்பட்டென அறைந்தான் ராஜன் .

" என்னங்கடா கொழுப்பா ? ரொம்ப ஆசைப்பட்டீங்கன்னு என் தங்கையை அழைத்து வந்தால்  உங்கள் சாக்கடை புத்தியை காட்டுறீங்களே நாய்களா , இனி என் முகத்தில் விழிக்காதீர்கள் .வா சபர்மதி " என அவள் கைகளை பிடித்தபடி காருக்கு நடக்க ...

" அவ்வளவு சீக்கிரமா உங்களை விட மாட்டோம் மச்சான் " குரல் மரங்களுக்கு பின்னிருந்து வந்தது .
அன்று ராஜனின்  நண்பர்கள் ...

" டேய் நீங்க எங்கடா இங்கே ...ஊருக்கு போறதா சொன்னீங்க "

" இப்படி ஒரு பிகரை என்னடா கையருகில் வைத்துக்கொண்டு எந்த ஊரிலும் எங்களுக்கு வேலை .அன்னைக்கே உன்கிட்ட மெல்ல பேசிப்பார்த்தோம் .நீ தங்கை தங்கைன்னு உருகிட்டு இருந்த .அதனால்தான் எல்லோருமாக திட்டம் போட்டு வுங்களை சுத்தி வளைத்திருக்கிறோம் ."

என்னடா உளர்றிங்க உன் தங்கை நடிகைதானே . அவளுடன் பேசனும் .போட்டோ எடுக்கனும்னுதானே சொன்னீங்க. ..

" ஆமா மச்சி போட்டோதான் ....ஆனா இப்போ எடுத்தோமே அந்த மாதிரி போட்டோ இல்லை .இவளை எங்கள் எல்லோருடனும் சேர்த்து விதம் விதமாக ...போட்டோ. ...வீடியோ தனியாக ...சேர்ந்து ...அதோ அந்த  பாறை மேல் .இதோ இந்த மரத்தடியில் "

இவள் ஒரு ஆர்ட்டிஸ்ட் என்பதால் அந்த போட்டோக்களுக்கு வீடியோக்களுக்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா ?
அசிங்கமாக கண்ணை சிமிட்டி அவன் விகாரமாக இளிக்க ...

நடுங்கதொடங்கினாள் சபர்மதி .ஐயோ ...என்ன நடக்கிறது ? அன்றே பூரணசந்திரன் சொன்னானே .ராஜனுடன் சேராதே என்று. கேட்காமல் வந்துவிட்டு இன்று இப்படி மாட்டிக்கொண்டு முழிக்கிறேனே ...தவித்தாள ்சபர்மதி

கார் சாவி.... காரில்தானே இருக்கிறது .வேகமாக காரை நோக்கி ஓடப்போனவள் தலை முடி பற்றி இழுக்கப்பட்டது ஒரு முரடனால் .
அதே நேரம் அவள் சுடிதார் சால் உருவப்பட , "முருகா ! வேலவா ! காப்பாற்றப்பா " என அலறத்தொடங்கினாள் சபர்மதி .

ராஜனை இருவர் பிடித்து மரத்தில் கட்டி விட அவன் கண்களில் நீர் வடிய " டேய் வேணான்டா, என்  தங்கைடா , விட்டுடுங்கடா "என கதறிக்கொண்டிருந்தான் .

மூன்று பேர் "வாங்கடா கொஞ்சம் சுருதி ஏத்திட்டு வருவோம் "என்றபடி ஒயின் பாட்டில்களுடன் ஒரு பாறை பின்னால் போய் விட்டனர் .

இருவர் சேர்ந்து சபர்மதியை பிடித்துகொள்ள கேமெராவுடன் ஒருவனும் தனது சட்டையை சுழற்றியபடி ஒருவனுமாக சபர்மதியை நெருங்கினர் .இதோ நெருங்கும் இவனை ஓங்கி மிதித்துவிட்டு ஓட வேண்டும் .அதிக தூரம் ஓட முடியாது .அவர்கள் ஏழுபேர் .எப்படியும் பிடித்து விடுவார்கள் .அந்த இடைப்பட்ட நேரத்தில் ஏதாவது செய்து உயிரை விட்டு விட வேண்டியதுதான் ." இவ்வாறு எண்ணியபடி கண்களை இறுக மூடியபடி அந்த ரவுடி அருகில் வர காத்திருந்தாள் சபர்மதி .

சூடாக எதுவோ அவள் முகத்தில் பட்டது .தொட்டு பார்த்தாள் .ரத்தம் ....தொடர்ந்து அலறலுடன் ஒவ்வொருவராக நான்கு பேரும் சாய்ந்து கொண்டிருக்க , பெரிய கட்டை ஒன்றை சுழட்டியபடி அவர்களை அடித்து கொண்டிருந்தவன் .....

தர்மசேகரன் ....ஆம் அவனேதான் ...வீட்டை. விட்டு வெளியேறும் ஆசையில் ராஜனுடன் சபர்மதி காரில்  ஏறும்போது இவனும் ஏறி பின்சீட்டினடியில் மறைந்திருந்தான் போலும் .

ஆச்சரியத்தில் விழி விரிந்தது சபர்மதிக்கு .அவனோ " ஏன்டா என் தங்கச்சியை அடிக்கிற ...என்றபடி அவர்களை மேலும் அடிக்க கட்டையை ஓங்குகிறான் .அதற்குள் சத்தம் கேட்டு பாறையின் பின் இருந்த மூவரும் வந்துவிட ஒருவன் " டேய் இந்தப்பைத்தியக்காரன் இங்கே எங்கடா வந்தான் ? " என்றான் .

" இந்த தம்பி அரை லூசு , அந்த அண்ணன் முழு லூசை அதுக்கே தெரியாமல் ஏத்திட்டு வந்திருக்கு போலடா ."

" சரி  வாங்கடா 
அவனையும் ஒரு மரத்தில் பிடித்து கட்டுவோம் "

அந்த மூன்று பேரும் தர்மசேகரனை நோக்கி வர...

" கட்டலாமே அதற்கு முன் இங்கே என்ன இருக்குன்னு பாருங்கள் ...."
கீழிருந்து எழுந்த நால்வரும் , இப்போது வந்த மூவருமாக திரும்பி பார்க்க ....போலீஸ் ...

" என்னடா மாப்பிள்ளைங்களா ....போகலாமாடா " இனஸ்பெக்டர் நக்கலாக கேட்க அவர் கையிலிருந்த துப்பாக்கிக்கு பயந்தபடி கைகளை உயர்த்தினர் ஏழு பேரும் .

" ஆதாரம் வேணும்னு கேட்டீங்க சார் .கண்ணெதிரே காட்டிட்டேன் .இனி இவர்களை ...." என்றபடி வந்தவன் பூரணசந்திரன்தான் .

ஒருவர் கழித்து அவனைப்பார்க்கவும் கண் கலங்கியது சபர்மதிக்கு .அவன் அவளை மறக்கவில்லை .அவள் முட்டாள்தனமாக ஏதாவது செய்தாலும் அவளை கண்காணித்தபடி இருந்து இறுதியில் காப்பாற்றி விட்டான் .

ஏதோ ஒரு மனநிறைவுடன் இப்படி நினைத்தவள் அப்படியென்றால் சென்னையில் அவளை வேவு பார்த்ததும் இது போல்தானோ ...?
அப்படித்தான் என்று சபர்மதிக்கு உறுதிபட  தொடங்கியது .இதோ வந்துவிட்டான் அவனிடமே கேட்டுவிடுவோமென சபர்மதி நிற்க அவன் இன்ஸ்பெக்டரிடம் நன்றி கூறிக்கொண்டிருந்தான் .

" சார் நீங்க கவலைப்படாதீங்க ....இனி நான் பார்த்துக்கொள்கிறேன்.இடையில் அந்த காட்டெருமை கூட்டம் வராவிட்டால் நாம் இன்னும் கொஞ்சம் விரைவாக வந்திருக்கலாம். மேடத்திற்கும் இவ்வளவு தொல்லை இருந்திருக்காது " என்றார் இன்ஸ்பெக்டர் .

" அதுதான் நாம் எதிர்பாராத விதத்தில் தர்மன் இடையில் வந்து அவன் தங்கையை காப்பாற்றி விட்டானே சார் " பூரணசந்திரன் பெருமையாக தர்மனை பார்த்தான் .

தர்மன் தன் சட்டையை சுழற்றி சபர்மதிக்கு போர்த்தி விட்டு " உன் சட்டை கிழிஞ்சிடுச்சே , குளிருமே ...இதை போட்டுக்கோ தங்கச்சி " என்று கொண்டிருந்தான் .

இன்ஸ்பெக்டர் புன்னகையுடன் அதைப்பார்த்து " லவ்வபுல் பிரதர் " என்றார் ."பின் நீங்க பார்த்து போங்க சார் "என்று விட்டு அந்த ரவுடிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார் .

" நீ உன் காரை எடுத்துட்டு வா ...." என்று ராஜனிடம் கூறி விட்டு , சபர்மதி பக்கம் திரும்பாமலேயே சற்று மறைவாக நிறுத்தியிருந்த தன் காரை எடுத்து வந்து அதில் "ஏறுங்க" என்றான் . சபர்மதி , தர்மனுடன் ஏறினாள் .

வீடு வரும் வரை ஒன்றும் பேசவில்லை .வந்ததும் நேரே அவுட்ஹவுஸ் சென்றான் .அங்கு அனுசூயா சத்யேந்திரனுக்கு பிஸியோதெரபி பண்ணிக்கொண்டிருக்க  உடன்  அதிசயமாக  அம்சவல்லியும் இருந்தாள் . இவர்களின்  காயங்களை பார்த்து பதறினாள் .தான் மருந்து கொடுத்து உறங்க வைத்த தர்மன் எங்கிருந்தோ ரத்தக்காயத்துடன் வந்து நிற்கிறானே என அனுசூயா விழித்தாள் .

" என்னப்பா என்ன ஆச்சு ?,"பதறினாள் அம்சவல்லி .

பதிலேதும் சொல்லாமல் வாசலை பார்த்தபடி நின்றான் பூரணன் .அனுசூயா மருந்தை எடுத்து வந்து தர்மனுக்கும் , சபர்மதிக்கும் தடவலானாள் .

காரை செட்டில்  நிறுத்திவிட்டு தயங்கியபடியே உள்ளே நுழைந்த ராஜனை ஓங்கி அறைந்தான் பூரணசந்திரன் .அவன் சுருண்டு சோபாவில் விழுந்தான் .

சத்யேந்திரனும் ,  அம்சவல்லியும் பதறினர் .அம்சவல்லி " டேய் என்னடா பண்ணி தொலைஞ்ச ?," ராஜனை உலுக்கினாள் .அவன் கண்கலங்கியபடி தலை குனிந்திருந்தான் .

"நான் ...நான் சொல்றேன் ..."முன்னால் வந்தான் தர்மன் ." அப்பா தம்பியும், தங்கச்சியும் கார்ல ஏறி வெளில போனாங்களா...நானும் போகலாம்னு கார்ல சீட்டுக்கடியில் அவுங்களுக்கு தெரியாம ஒளிஞ்சிக்கிட்டேன் .அங்க ஒரு காட்டுக்குள்ள நிறைய கெட்ட பசங்க தம்பியை கட்டிப்போட்டுட்டு தங்கச்சியை அடிக்க போனாங்களா ..நான் ஒரு கட்டையை எடுத்து அவுங்களையெல்லாம் அடிச்சு தங்கச்சியை காப்பாத்திட்டேன் " தனது சாகசங்களை குழந்தையின் குதூகலத்துடன் விவரித்தான் தர்மசேகரன் .

வாஞ்சையுடன் தரமசேகரனை பார்த்த அம்சவல்லி ,  வேகமாக திரும்பி ராஜசேகரனை கன்னத்தில் அறைந்தாள் ."அந்த பாழாய் போன நண்பரகளை விட்டு விடுன்னு எத்தனை தடவை பூரணன் சென்னான் கேட்டாயா ?" என்றாள் .

" இல்லம்மா இனி விட்டுடுறேன்மா அவுங்க பக்கமே இனி திரும்ப மாட்டேன்மா  " அழுகையின் ஊடே உறுதியளித்தான் ராஜன் .

ஒரு நிம்மதி தெரிந்தது பூரணசந்திரனிடம் .சத்யேந்திரனை நோக்கி " மச்சான் ராஜனை பற்றி இனி கவலைப்பட வேண்டியிருக்காது .தொழிலை பார்ப்பதோ ,மேற்கொண்டு படிப்பதோ அவன் விருப்பம் போல் செய்து கொள்ளட்டும் .தர்மனுக்கு ஒரு புது வகை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன் .அவர் அடுத்த வாரம் வந்து இங்கேயே தங்கி அவனை குணமாக்க முயற்சிப்பார் .
தொழிலை கவனிக்க எனக்கு மிக நம்பிக்கையான ஒருவரை ஏற்பாடு செய்திருக்கிறேன் .அவர் உங்கள் ஆலோசனையின்படி நன்றாகவே தொழில் நடத்துவார் .நம்பிக்கையானவர் ."என முடித்தான் .
அம்சவல்லியிடம் " அக்கா என்னால் முடிந்தவரை உங்கள் குடும்பத்தை கட்டியிருக்கிறேன் .இனி அதனை சிதற விடாது பார்த்துக்கொள்ளுங்கள் .இப்போது எனது கடமைக்காக எனக்கு விடை கொடுங்கள் " என்றவன் சத்யேந்திரன் ,அம்சவல்லியிடம் காலில் பணிந்து ஆசி பெற்றான் .

இதோ அடுத்து என் பக்கம் திரும்ப போகிறான் என சபர்மதி எதிர்பார்த்திருக்க , அனுசூயாவிடம் ஒரு சிறு தலையசைப்பில் விடை பெற்றவன் சபர்மதி பக்கம் கண்ணை கூட திருப்பாமல் போய் விட்டான் .போயே விட்டான் .

பதினேழு 



என்ன இது ? இப்படி திரும்பிக்கூட பார்க்காமல் போய்விட்டானே .இன்னும் கோபம் குறையவில்லையா .தவித்தபடி அவன் சென்ற திசையை பார்த்தபடி நின்றிருந்தாள் சபர்மதி .

"எல்லோரும் போங்க .நான் சபர்மதியிடம் கொஞ்சம் பேச வேண்டும் ."சத்யேந்திரன் .

அனைவரும் விலக " உட்காரும்மா " என்றார் .ஏனோ இப்போது அவரை மறுக்க தோன்றவில்லை சபர்மதிக்கு .தலை குனிந்தபடி அவர் முன் அமர்ந்தாள் .எப்படி ஆரம்பிக்க என தெரியாமலோ என்னவோ சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தார் .

" மதிம்மா உன்னிடம் நிறைய சொல்லனும்டா .எப்படின்னு ...நான் இதைப்பற்றி.... உன்னிடம் ...தடுமாறினார் .

" எங்கள் அம்மா பட்ட துயரங்களை அருகிருந்து பார்த்தவள் நான். அதனால். இப்போது கூட அதற்கு காரணமான உங்களை அப்பா என அழைக்க என் நாக்கு புரள மறுக்கிறது ."

" ம்...புரிகிறது ...
என்னோட கதையில் பூரணசந்திரனுடனான உன் வாழ்க்கை சிறிது இருக்கிறது .அதனால் நான் எங்களிலிருந்தே தொடங்குகிறேன் .நான் தமயந்தியை சந்தித்த போது ராஜன் அம்சவல்லியின் வயிற்றிலிருந்தான் .
காதலென்பதையே அறியாது வெறுமனே இரு பணப்பெட்டிகளுக்கு நடந்த திருமணம் எனக்கும் அம்சவல்லிக்குமானது .ஏதோ ஓர் வெற்று வாழ்வு வாழ்ந்த எனக்கு அடர்கானக தீபமாக தோன்றினாள் தமயந்தி .

அம்சவல்லியின் உறவினர் வீட்டிற்காக உங்கள் அம்மா கிராமத்திற்கு வந்தோம் .அங்கே திருவிழாவில் உன் அம்மா பரதம் ஆடினாள் .நான் அதற்கு தலைமை ஏற்றேன் .அவள் பாதங்களின் ஒவ்வோரு தாளத்திலும் நானும் சேர்ந்து மிதிபடுவதாக உணர்ந்தேன்.காதல் என்ற  உணர்வை அணு அணுவாய் உணர்ந்தேன் .

அவளுக்கும் என்னிடம் அதே உணர்வு .பின்னால் என்னிடம் இதனை சொன்னாள் .அந்த சிறு கிராமத்தில் பிறர் கண்ணில் படாமல் அதிக நாட்கள் எங்கள் காதல் நிலா வளரவில்லை .எங்கள் இருவர்  வீட்டிற்கும் இந்த காதல் லேசாக கசிய ஆரம்பிக்க , நான் மணமானவன் என்ற உண்மை தமயந்திக்கு தெரியவந்தது .

" அதைக்கூறாமலேதான் என் அம்மாவிடம் பழகினீர்களா " இடையிட்டாள் சபர்மதி .

குற்றவுணர்வுடன் தலையசைத்தார் சத்யேந்திரன் ." ஆனால் தெரிந்த பின்னும் தமயந்தியால் என்னை பிரிய முடியவில்லை. எங்கள் காதலின் பலம் அது " மெலிதான பெருமிதம் சத்யேந்திரன் குரலில் .

" சீச்சி ...இதில் என்ன பெருமை ....வயிற்றில் பிள்ளையோடு இருந்த உங்கள் மனைவிக்கு துரோகம் செய்திருக்கிறீர்களே ? இந்த பாவம் சும்மா விடுமா உங்களை ..."

" உண்மை பாவம்தான் அது என்னை சும்மா விடவில்லை. அதனால்தான் இப்படி இருக்கிறேன்" என்றபடி தனது விளங்காத கை கால்களை பார்த்துக்கொண்டார்.

"என் அம்மாவையும் அந்த பாவம் சும்மா விடவில்லை. எத்தனையோ துயரங்களை அவர்களும் அனுபவித்து விட்டார்கள் ." கண்கலங்கினாள் சபர்மதி .

தலையசைத்து ஆமோதித்தார் சத்யேந்திரன் " ஆனால் நீ என்னம்மா பாவம் செய்தாய் .உனக்கு ஏன் இந்த துயரங்கள். எங்கள் தவறுக்கு நீ என்னடா கண்ணா செய்வாய் " தழுதழுத்தார் .

" உங்களைப் போன்ற பாவிகளுக்கு மகளாக பிறந்தேனே அதுதான் " வெடுக்கென கூறினாள் .

மௌனமானார் சத்யேந்திரன்.மனதின் வலி விழி வழியே இறங்கியது .சபர்மதிக்கும் இப்போது வலித்தது .
தலையை திருப்பியபடி" அப்புறம் ...." என்றாள்.

ஒரு பெருமூச்சுடன் " ம்...யாருக்கும் தெரியாமல் ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். ஒரு வருடம் ஆந்திர எல்லையோரம் ஒரு கிராமத்தில் வாழ்ந்தோம் . பணம் இல்லை.அன்றாட  உணவுப்பாடு மட்டுமே ஓடியது .ஆனாலும் உலகத்தை ஆளும் சக்கரவர்த்தி மன நிலையில் இருந்தேன் அப்போதெல்லாம் .என் வாழ்வில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வேண்டிய தினங்கள் அவை .எங்கள அன்பின் பரிசாக நீ பிறந்தாய் .வாழ்வு மேலும் சுவாரசியமாகவே சென்று கொண்டிருந்தது .

என்னையும் , தமயந்தியையும் தேடி அம்சவல்லி வீட்டினர் வந்து விட்டனர் .கையில் தர்மனை பிடித்தபடி , இடுப்பில் ராஜனை சுமந்தபடி " எனக்கு என்ன பதிலென்று வந்து நின்ற அம்சவல்லியை பார்த்ததும் தமயந்தி உடைந்து விட்டாள் .தான் ஒதுங்கிக்கொள்வதாக அவளுக்கு வாக்களித்து விட்டு , நான் உயிருடன் இருக்கும் வரை என்னை வந்து பார்க்க கூடாது . உயிரை விட்ட பின் என் மகளை உங்கள் பொறுப்பில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு , என்னை விட்டு அவள் அண்ணனுடன் சென்று விட்டாள் .

உன் அன்னை இறந்த விபரம் எனக்கு ஒரு வருடம் கழித்துதான் தெரிய வந்தது .உன்னைத்தேடி உன் தாய்மாமன் வீடு வந்த போது , நீ இல்லை .கேட்டபோது ....சற்று தடுமாறினார் சத்யேந்திரன் .

எதுவோ மனதை பிசைய " என்ன என்ன கூறினார்கள் ..." என கேட்டாள் சபர்மதி .

" உன் அம்மாவைப்போன்றே நீயும் யாருடனோ ...." முடிக்கும் முன் குரல் உடைந்தது சத்யேந்திரனுக்கு .

என்ன மனிதர்கள் இவர்கள் .நாளெல்லாம் அன்னையின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டு என்ன அநியாயம் செய்திருக்கிறார்கள் ...உள்ளம் கொதித்தது சபர்மதிக்கு .

" நான் அதை நம்பவில்லை .எங்கோ மும்பை போய்விட்டதாக கிடைத்த தகவலோடு அங்கு போனேன் .பிறகு கர்நாடகா , ஆந்திரா ...பத்து வருடங்கள் தொழிலை விட இதைத்தான் பார்த்தேன் .நீ கிடைக்கவில்லை "

உண்மை பெருந்தேவியுடன் இந்த எல்லா இடங்களுக்கும் சுற்றியிருக்கிறாள் சபர்மதி .எல்லா மொழி டிவிகளிலும் சிறிது தலை காட்டிக்கொண்டிருந்தாள் பெருந்தேவி அப்போது .சபர்மதியின் இருபதாவது வயதில் சென்னை வந்தார்கள் .இப்போது சபர்மதிக்கே வாய்ப்புகள் வர ஆரம்பிக்க அப்படியே சென்னையில் செட்டிலாகி விட்டார்கள் .

"கடைசியாக சென்னை பற்றிய தகவல் கிடைத்து உன்னை பார்க்க வரலாமென எண்ணியபோது என் உடம்பு இப்படி ...." பலன்ற்ற தன் கை கால்களை பார்த்துக்கொண்டார் சத்யேந்திரன் ."நான் செய்த பாவங்களெல்லாம் என்னை துரத்த தொடங்கின .நான் மூலையில் முடங்கிவிட்டேன் ."

மனதில் பரிதாபம் தோன்ற " விடுங்க பாவங்களை அனுபவிக்கவும் ஒரு அளவுகோல் , அந்த முருகன் வைத்திருப்பான் .விரைவில் அது உங்களுக்கு முடிவுக்கு வந்துவிடும் " இன்னமும் அப்பா என அழைக்க நா வராவிடினும் ...ஆறுதல் சொல்ல மனம் வந்திருந்தது சபர்மதிக்கு .

ஆனால் தீவிரமாக தலையாட்டி அதனை மறுத்தார் சத்யேந்திரன் " இல்லைம்மா என் பாவங்களை அளக்க அளவுகோல் கிடையாது .எண்ணிலடங்காதவை அவை .உன் அன்னைக்கு , அம்சவல்லிக்கு இழைத்ததை விட அதிக பாவத்தை நான் ...பூரணசந்திரனுக்கு இழைத்திருக்கிறேன் "

அதிர்ந்து நோக்கி " என்ன சொல்றீங்க " என்றாள் .

அம்சவல்லியின் அன்னையும் , பூரணசந்திரனின் அன்னையும் அக்கா , தங்கை .உடன்பிறந்தவர்கள் இல்லை.கொஞ்சம் சுற்று வழி .பூரணசந்திரனின் தந்தை வணங்காமுடி .பெயருக்கு ஏற்றபடி கொஞ்சம் கறாரான ஆசாமி .வெளிப்போக்குக்கு உறவினரென்று தோளில் கை போட்டுக்கொண்டாலும் ,உள்ளே எங்களிருவருக்குமிடையே தொழில் போட்டி கனன்றுகொண்டே இருந்தது .
ஒரு முக்கியமான ஏலம் .இதனை எடுப்பவர்கள் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் வாய்ப்பு மட்டுமின்றி ஊருக்குள் மதிப்பு ,மரியாதை .எப்படியும் இதனை அடைந்தே ஆக வேண்டுமென்ற தீவிரம் எங்கள் இருவருக்குள்ளும் .குறிப்பிட்ட அந்த நாளில் நான் ஏலத்திற்காக  அவசரமாக சென்று  கொண்டிருந்தேன் .வழியில் ஒரு விபத்து .யாரென்று காரை நிறுத்தி பார்த்தால் வணங்காமுடி தான் .

இப்போது அவரை என் காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனை சென்றால் , ஏலம் போய்விடும் .எனக்கு முடிவெடுக்க இரண்டு நிமிடம் போதுமாக இருந்தது .ஏலம் நடக்கும் இடத்தை அடைந்ததும் ஆம்புலன்சுக்கு போன் பண்ணி சொல்லிவிட்டு , சின்ன காயமாகத்தான் இருக்கும் என என்னை நானே , சமாதானம் பண்ணிக்கொண்டு ஏலத்தை வென்று திரும்பும்போது , வணங்காமுடியின் மரணசெய்தி என் காதுக்கு வந்தது .
நான் அவரைப்பார்க்காமல் சாலையிலேயே விட்டுவிட்டு போன விசயம் எப்படியோ கசிந்து ஊர் முழுவதும் பரவிவிட்டது .

அதன் பிறகு சுந்தரவடிவு அதாம்மா பூரணசந்திரன் அம்மா எங்கள் வீட்டை ஒதுக்கிவிட்டார்கள். ஆனால் அதன்பிறகு நன்றாக இருந்த தர்மன் தனது படிப்பை முடித்து தொழிலுக்குள் நுழையும் நேரம் அவனது மனது பாதிக்கப்பட்டது.அந்த கவலையோ உன்னைக் காணாத கவலையோ  எனக்கு உடல்நலம் இப்படியாகி  விட்டது .பொறுப்பேற்க பயந்து நெருங்கிய  சொந்தங்கள் கூட ஒதுங்கிக்கொள்ள தானே பொறுப்பேற்க வந்தான் பூரணசந்திரன்.

தன் அன்னையே தன்னை அனுப்பியதாக சொன்னான் .அவன் மட்டும் வராவிடில் நம் குடும்பம் இப்போது இருக்குமிடம் தெரியாமல் அழிந்திருக்கும்.ஒருநாள் பூரணனிடம் மன்னிப்பு கேட்பதற்காக ஆரம்பித்த போது , " விடுங்க மச்சான் குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை " என்றான் .கடவுள் எனக்கு அளித்த தண்டனையிலேயே கொடுமையான தண்டனை எந்த உயிரை அலட்சியப்படுத்தி நடுரோட்டில் 
போட்டு விட்டு வந்தேனோ , அந்த உயிரின் குடும்பம்தான் இன்று என் குடும்பம் தாங்கும்படி செய்தது .

என் கவலையறிந்து உன்னையும் அழைத்து வந்தான் .எப்படியும் உன்னை சமாதானம் செய்து பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைத்துவிட்டு தனது நெடுநாள் கனவான இந் த பயணத்திற்கு செல்லப்போவதாக சொல் லிக்கொண்டிருந்தான் .

அன்று திடீரென வந்து உன்னை மணக்க போவதாக சொன்னதும் நான்  மகிழ்ச்சியில் என்ன சொல்ல என்றே தெரியாமல் தவித்து கொண்டிருக்கையிலேயே , நீ அவனுடன் சண்டை போட்டு விட்டாய் .
அன்று போனவன் தொழிலை மட்டும் பார்த்துக்கொண்டு வீட்டிற்கு வராமல் வெளியேயே இருந்து விட்டான் .
" மதிம்மா பூரணனை போல் ஒரு நல்ல மாப்பிள்ளை ...."

"அவர் எங்கே போகப்போகிறார் அப்பா ?" சபர்மதி மெல்ல கேட்டாள் .

ஒரு சிறு சொல்லுக்கு இவ்வளவு சக்தி இருக்க முடியுமா ?....கண்கள் கலங்கி ..நாக்குழறி கண்ணீர வழிய தொடங்கியது சத்யேந்திரனுக்கு ...
" எ...எ..என்..என்ன...ம்...மா ...என்று அவர் குழற , தண்ணீர் தந்து அவரை ஆசுவாசப்படுத்தினாள் சபர்மதி .

" அப்பா ...அன்பாக அவரை வருடியபடி சொன்னாள் நீங்கள் செய்த பாவத்திற்கெல்லாம் வேண்டு மட்டும் தண்டனை அனுபவித்து விட்டீர்களப்பா .இனி அனுபவித்த தண்டனைகளுக்கான சமன்கள்தானப்பா உங்கள் வாழ்வில் அதனை உங்கள் மகளாக கண்டிப்பாக நான் உங்களுக்கு கொடுப்பேன் .நம் வீட்டை , தொழிலை, சித்தியை , அண்ணன்களை அனைவரையும் இனி நான் பார்த்துக்கொள்கிறேனப்பா." என்றவள அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து

" அப்பா இத்தனை பெரிய வேலையை நான் பூரணனுடன் இணைந்து செய்ய விரும்புகிறேனப்பா " என்றாள் சபர்மதி கன்னங்கள் கனிய ..தன் காதலை மறைமுகமாக தகப்பனிடம் வெளிப்படுத்தினாள் .

" என் கண்ணே " என அவளை குனிந்து உச்சி முகர்ந்தார் சத்யேந்திரன் .

" செய்டா கண்ணம்மா நீயும் , உன் கணவனுமாக இந்த பாவப்பட்ட அப்பனின் குடும்பத்திற்காக , உங்கள் இருவருக்கும் நான் செய்த பாவங்களை மறந்து நன்மை செய்யுங்கள் கண்மணிகளா !...அதை விட இந்த தகப்பனுக்கு பெரிய தண்டனை இல்லையில்லை இது பாக்கியம் .இந்த பாக்கியத்தை இந்த பாவிக்கும்  தர நினைக்கிறீர்களே ...நீங்கள் இருவரும் நூறாண்டு காலம் வற்றாத செல்வத்தோடு வாழ்வாங்கு வாழ்வீர்களம்மா "என வாழ்த்தினார் .

" பூரணன் என்ன செய்யப்போகிறாரப்பா . எங்கோ போகப்போவதாக ....." என்று இழுத்தாள் சபர்மதி .

பெருமை மின்னியது சத்யேந்திரன் முகம் ." என் மாப்பிள்ளையை சாதாரண ஆளாக எண்ணி விடாதேம்மா .அவர் மிக விரைவில் உலக புகழ் பெற போகிறார் .அவர் ஒரு புது வகை மருந்து கண்டுபிடித்திருக்கிறார் .அதனை வெளிநாடு முழுவதும் பரப்ப போக போகிறார் .கிட்டதட்ட உலகம் முழுவதும் ."

" அப்பா எனக்கு புரியவில்லை "

" அதாவதும்மா நம் பகுதிகளில் ஒரு வகை மூலிகை விளைவதை , தற்செயலாக கண்டுபிடித்திருக்கிறார் பூரணன் .அதன் நன்மைகளை ஆராய்ந்தால் ...தற்போது மருந்தில்லா சில உயிர்கொல்லி நோய்களுக்கான 
மருந்துகள் அதிலிருப்பதை கண்டிருக்கிறார். சுமார் ஐந்து ஆண்டுகள் ஆகின இதனை உறுதிபடுத்தி கொள்ள .இதனை அரசாங்கத்திடம் தெரியப்படுத்த சென்ற போது பிரச்சினை வந்தது .நம் நாட்டு அரசியலமைப்புதான் உனக்கு தெரியுமே அம்மா .ஒரு மந்திரி இந்த மருந்து விபரம் தெரிந்து இதன் பார்முலாவை எப்படியாவது பூரணனிடமிருத்து வாங்கி , தானே மருந்திற்கான உரிமம் பெற எண்ணினார் .

அதனால் பூரணன் தன்னுடன் படித்த ஒருவரின்  தந்தை , அவரும் மந்திரிதான் .அவர் உதவியை நாடினார் .ஆனால் அந்த மந்திரி இந்த மருந்து தனக்கு கிடைக்காத ஆத்திரத்தில் , கவர்னர் , பிரதமர் வரை எதையோ சொல்லி இந்த மருந்திற்கு தடை வாங்கி விட்டார் .இப்போது நம் மந்திரி ஒரு ஆலோசனை சொன்னார் .அதாவது இந்த மருந்தை உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும் கொண்டு சேர்க்க வேண்டும் இனாமாக .அதனை உபயோகித்தவர்கள் மேலும் அதற்காக நம் அரசாங்கத்தை நெருக்குகையில் அரசாங்கம் மூலையில் தூக்கி போட்ட அந்த மருந்து தயாரிப்பை தூசு தட்டி எடுத்தே ஆக வேண்டும் .

எந்த நன்மையாக இருந்தாலும் வெளிநாட்டவர் மூலம் வந்தால்தானே நம் நாட்டினர் அதற்கு மதிப்பு கொடுக்கின்றனர்.எனவே இப்படி ஒரு திட்டம் .

இதுவே பூரணன் மற்றும் நம் மந்திரியின் திட்டம் .இந்த மருந்தின் மகத்துவத்தை  கிட்டதட்ட உலகம் முழுவதும் பரப்ப , அனைத்து விபரமும் அறிந்த பூரணன்தான் செல்ல வேண்டியிருக்கிறது .
அந்த பயணம் எத்தனை நாட்கள் நீடிக்குமோ தெரியவில்லை .பூரணன் அநேகமாக அடுத்த வாரம் கிளம்புவார் என நினைக்கிறேன் " மிகப்பெரிய விளக்கம் சொல்லி முடித்தார் சத்யேந்திரன் .

எவ்வளவு பெரிய விசயம் .எவ்வளவு அறிவாளி பூரணன் .இவனை புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்தோமே .வருந்தினாள் சபர்மதி .

" அப்பா ...நான் ...நாளை அவரை பூரணனை போய் ...பார்த்து விட்டு வரட்டுமா ..." தயங்கி தயங்கி அனுமதி கேட்கிறாள் .

ஆதரவாக தலை வருடுகிறார் தகப்பன் " கண்டிப்பாக போய் பாரம்மா .பூரணன் காலை ஏழு மணிக்கெல்லாம் வீட்டை விட்டு வெளியேறி விடுவான் .அவனுக்கு பல வேலைகள் .மீண்டும் ஒரு பன்னிரென்டு மணியளவில் வீடு திரும்பி தாயுடன் மதிய உணவு உண்ணுவது வழக்கம் .அப்போது நீ அவர்கள் வீட்டிலேயே சென்று அவர்களை பார் .அதுதான் சரியாக இருக்கும் " என்றார் .

மனம் நிறைய மகிழ்ச்சியுடன் தன் மனம் நிறைந்தவனை மறுநாள் சந்திக்க போகும் ஆசையுடன் பல இன்பக்கனவுகளுடன் அன்றைய இரவைக் கழித்தாள் சபர்மதி .

ஆனால் இன்பம் என்பதனை நீ அடைய இன்னமும் சில காலம் கிடக்கு கண்ணே என்பதனை சொல்லாமல் சொல்லியபடி மறுநாள் பொழுது அவளுக்காக சிவப்பாக விடிந்தது .


பதினெட்டு 



அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது சபர்மதிக்கு. எங்கே பூரணசந்திரன் இரவெல்லாம் கனவில் தூங்க விட்டால்தானே அவளை .வெண்பனி சிகரத்தின் ஒரு மூலையில் முளைத்திருந்த அந்த சிவந்த பூவை , போட்டி போட்டு இருவருமாக பறித்துக்கொண்டிருந்த போது , பனிமழை வந்து விட குளிர் தாங்காது நடுங்கியவளுக்காக தன்னையே போர்வையாக்கிக் கொண்டான் பூரணன் .

இயற்கையின் ஒவ்வொரு துளியையும் 
என்னுள் விதைக்கிறது 
அப் பனிமலை பூ 
குளிரென்று உன்னை போர்த்திக் கொண்டு 
எனக்குள் விதைக்கிறாய் உன்னை 
அணு அணுவாக .
இப்பிரபஞ்சம் சுழல்கிறது 
என் காலடியில் .

இரவுக்கனவு விதைத்த கவிதை துளிகள் இவை. ஒரு நோட்டில் பத்திரப்படுத்திக்கொண்டாள் சபர்மதி .பூரணசந்திரனிடம் காட்ட வேண்டுமே .குளித்து கீழே இறங்கி வந்தவளுக்கு காவேரி வழங்கிய காப்பியில் , காப்பி என்று சொல்லக்கூடிய எந்த அறிகுறியும் இல்லை. தனது சீர்திருத்தத்தை முதலில் முதலில் காவேரியிலிருந்து ஆரம்பிப்போம் என எண்ணியவள் " காவேரி ...காவேரி ..." மூன்று முறை உரக்க அழைத்த பின்பும் நிதானமாக வந்து நின்று "என்ன .." என்றாள் அவள் .

சபர்மதி இந்த வீட்டினுள் நுழைந்த இரண்டாவது தினமே அனைத்து வேலையாட்களையும்  அழைத்து சபர்மதி தனது மகள் என்ற விசயத்தை அறிவித்து விட்டிருந்தார் சந்யேந்திரன் .இருந்தும் அலட்சியத்தை பார் ..என எண்ணினாலும் , தான் இது வரை இங்கிருந்த நாட்களில் இந்த வீட்டு வாரிசாக நடந்திருந்தால் அல்லவா வேலையாட்களுக்கு அந்த எண்ணம் வரும் என நினைத்துக்கொண்டவள் அவளை பார்த்து " பாருங்கள் காவேரி காப்பியில் தூள் இல்லை 
சீனி இல்லை , சூடும் இல்லை .இது என்ன இன்ஸ்டென்ட் காபியா ...ஏன் பில்டர் காபி போட மாட்டீர்களா? சாதாரணம் போலவே காட்டி கேட்டாள் .

" ஆமா வேலை எனக்கு இந்த வீட்டில் குவிந்து கிடக்கிறது .இதில் பில்டரை இறக்கி ,ஏத்தி எங்கே நான் காபி போடுறது ? சரி ..சரி ..குடிச்சிட்டீஙகன்னா டம்ளரை குடுங்க , உள்ளே போட்டது போட்ட மாதிரி கிடக்கு " அலட்சியம் தெறித்து விழுந்தது குரலில் .

அது மட்டுமின்றி குடிக்க முடியாமல் பாதி கையில் அப்படியே வைத்திருந்த காபியை வேறு பிடுங்க முற்பட்டாள் .காபி டம்ளரை இறுக்கி பிடித்தபடி " உங்கள் சம்பளம் எவ்வளவு காவேரி " கேட்டாள் சபர்மதி .

" அது பெரியம்மாவின் வேலை , உங்களுக்கு ஏன் அதில் கவலை ..." மேலும் அலட்சியம் .

"இல்லை இந்த மாதத்திலிருத்து உங்களுக்கு சம்பளம் நான்தான் தர போகிறேன் ." கூறிய சபர்மதி இப்போது டம்ளரை அவள் கையில் கொடுத்து "போய் இப்போதே பில்டர் இறக்கி ஒரு நல்ல காபி போட்டு எடுத்துட்டு வாங்க "

திருதிருவென முழித்தபடி போய் பத்து நிமிடத்தில் காவேரி போட்டு வந்த காபி கொஞ்சம் பரவாயில்லை.

"ம் ...இது பரவாயில்லை ...ஆனால் நீங்கள் இன்னும் நன்றாக போட படிக்க வேண்டும் .நாளை இன்னும் பெட்டராக எதிர்பார்க்கிறேன் .இப்போது காபியை டிரேயில் வைத்து செட் பண்ணி குடுங்க பார்ப்போம் .நான் அப்பாவுக்கு எடுத்துட்டு போறேன் ." மனமில்லாமல் தலையாட்டியபடி சென்றாள் காவேரி .

இப்படி டிரேயில் செட் பண்ணி வைத்தால் , அது ஒரு வேலை...மேலும் கழுவுவதற்கான பாத்திரங்கள் கூடுமே .எனவே டிரே ஜக் எல்லாம் பேக் பண்ணி பரண் மேல் போட்டு விட்டிருந்தாள் .அதனை எடுக்க  வேண்டுமா என்று அலுமினிய ஏணியை  விரித்து வைத்தபடி யோசனையில் இருந்தாள் காவேரி .

" யோசிக்காமல் எடுத்து விடுங்க .இனிமே தினமும் வேண்டியிருக்கும் " என்றபடி உள்ளே வந்தாள் சபர்மதி .
" இந்த ஸ்டோர் ரூம் சாவி எங்கே ? "

எடுத்துக்கொடுத்தாள்.

உள்ளே எட்டி பார்த்தாள் " ஏன் சாமான்களை இப்படி குப்பையாக போட்டு வைத்திருக்கிறீர்கள் .ஒன்று செய்யுங்கள் .இன்று காலை உணவு முடிந்ததும் இந்த அறையை ஒதுக்கி சாமான்கள் லிஸ்ட் எடுத்து எனக்கு கொடுங்கள் ....அப்புறம் காலையில் என்ன டிபன் பண்ண போறீங்க ? "

" அ...அது ..வந்து ...சூடா உப்புமா பண்ணலாம்னு ...."

" என்னது உப்புமாவா ...அது யார் கேட்ட டிபன் ...?"

" யாரும் கேட்கவில்லை. நானே முடிவு ....." மேலே தொடராமல் நிறுத்தினாள் .
" ம்....அப்போ நீங்களே சாப்பிடுங்க .எங்களுக்கு ...பொங்கல் ...எனக்கு , ராஜாண்ணனுக்கு ,அனுசூயாவுக்கு ...சித்திக்கு , தர்மனண்னனுக்கு சப்பாத்தி ...காய்கறி குருமா காரமில்லாமல் பண்ணிடுங்க ...அப்பாவுக்கு கேப்பை கூழும் , வெங்காய துவையலும் ...ம்..அப்புறம் பொங்கலுக்கு சட்னி சாம்பாரோட , ரெண்டு வடை தட்டிப் போட்டுடுங்க ... , வேலை பார்க்கிறவங்க எல்லோரும் உங்க ஆசைப்படி உப்புமா சாப்பிட்டுக்கோங்க ...சரியா .இப்போ டிரே செட் பண்ணி கொடுத்தீங்கன்னா அப்பாவுக்கு எல்லோருக்கும் காபி கொண்டு போவேன் " நீளமாக பேசி முடித்தாள் சபர்மதி .

காவேரிக்கு தலை சுற்றியது .கைக்கு வந்ததை இஷ்டத்திற்கு சமையல் என்று சமைத்து வைத்து விட்டு வேலையாட்களாக நினைத்ததை செய்து சாப்பிட்டு வந்த நிலை போய் இப்போது இப்படி ஒரு நிலையா ...என்ன செய்வது ,யோசித்தபடி ஏணியில் ஏறுகிறாள் .

டிகாசன் , பால் , சர்க்கரை மற்றும் சில பிஸ்கட்டுகளுடன் தந்தைக்காக அவுட்ஹவுஸ் சென்றாள் சபர்மதி .
தந்தையிடம் காவேரி தன்னிடம் இன்று காலை வாங்கிய மண்டகப்படியை விபரமாக ஒப்புவித்துக்கொண்டிருந்த போது , கதவு படாரென தள்ளப்பட்டது .விரிந்த கூந்தலுடன் கண்ணகிக்கு தங்கையோ எனும் தோற்றத்துடன் நின்றிருந்தாள் அம்சவல்லி ." ஏண்டி உனக்கு என்ன திமிர் இருந்தால் காவேரிகிட்ட அதைப்பண்ணு இதைப்பண்ணு , அப்படி , இப்படின்னு  அதிகாரம் பண்ணியிருப்ப  .நான்தான் இனி வீட்டு எஜமானி ன்னு சொன்னியாமே .எப்பொழுதுடி  அந்த உரிமையை உனக்கு பட்டா வச்சேன் .ஒழுங்கா அவகிட்ட போய் எப்பவும் போல சமையல் பண்ணினா போதும்னு சொல்லு போ .இல்லை நடக்கிறதே வேற " சாமியாடி போல் கத்தினாள்

இடையிட்டு பேச முயன்ற சத்யேந்திரனை கையமர்த்திவிட்டு " தயவுசெய்து கொஞ்சம் அமைதியாக. இருங்கள் பெரியம்மா.நான் ஒன்று சொன்னால் காவேரி ஒன்று புரிந்து கொண்டாள் போல .நீங்கள் முதலில் உட்கார்ந்து ஒரு கப் காபி குடியுங்கள .பிறகு பேசலாம் ."

"பிறகு என்னடி பிறகு ...இப்பவே பேசு "
" சரி பெரியம்மா பேசுறேன் ...நீங்க காபி சாப்பிட்டுட்டே பேசுங்க " என்றபடி டிகாசனை திறந்து கப்பில் ஊற்றினாள் .மணம் காற்றில் பரவியது .அதனை நுகர்ந்த அம்சவல்லி பேசாமல் காபி குடித்து விட்டு பேசுவோமா என யோசிக்க தொடங்கினாள் .அந்த யோசனையை தனக்கு சாதமாக்கி, காபி கப்பை அவள் கையில் திணித்து அமர வைத்தாள் சபர்மதி .உடன் தட்டில் பிஸ்கட்டுகளையும் வைத்து நீட்டினாள் .

நேற்று நடந்த பிரச்சினைகளில் இரவு சரியாக உண்ணவில்லை அம்சவல்லி .சரியான உறக்கமுமில்லை. எனவே காலை எழுந்திரிக்கும் போதே தலைவலி .உடனே காபி குடிக்கும் எண்ணத்துடன் வந்தவளுக்கு , வழக்கமாக தரும் அந்த கழுநீர்தண்ணி கூட தராமல் சபர்மதி 
மேல் புகார் பட்டியல் வாசித்தாள் காவேரி .இப்போது அந்த எரிச்சலை முழுவதும் சபர்மதி மீது கொட்டிக்கொண்டிருந்தாள்  .

ஆனால் அந்த நல்ல காபியும் , புரோட்டின் பிஸ்கட்டுகளும் அவளை நல்ல மூடுக்கு கொண்டு வந்தன .அவள் குடித்து முடிக்கும் வரை காத்திருந்த சபர்மதி " காப்பி எப்படி இருக்கிறது பெரியம்மா ..."

" ம்..ம்..டிகாசன் இன்னும் கொஞ்சம் திக்கா இருந்திருக்கலாம். மற்றபடி நல்லாத்தான் இருக்கு  ஆனால் நீ ஏன் அவளிடம் ...",

" இதைத்தான் நான் சொன்னேன் பெரியம்மா , நம் வீட்டில் யார் யாருக்கு என்னென்ன சமைக்க வேண்டுமென்று , அதை தப்பாக புரிந்து கொண்டு  உங்களிடம் ஏதோதோ சொல்லி விட்டார்கள் போல ...உங்களுக்கு காலையில் என்ன செய்ய சொல்லட்டும் ...சூடாக பூரி சுட சொல்லட்டுமா ?" பணிவாக கேட்டாள் சபர்மதி .

முகம் சுளித்தபடி "பூரி எண்ணெய் ...நான் டயட்டில் இருக்கிறேன் ..." முணுமுணுத்தாள் அம்சவல்லி .

" அதனால்தான் சப்பாத்தி போட சொல்லியிருக்கிறேன் .தொட்டுக்க காரமில்லாமல் காய்கறி குருமா ..சரிதானே...இது போன்ற சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் இனி உங்களை தொந்தரவு செய்யாமல் என்னிடம் கேட்டுக்கொள்ள சொல்லியிருக்கிறேன் .அவ்வளவுதான் .நீங்கள் ஏதேதோ நினைத்து மனதை குழப்பிக்கொள்ளாதீர்கள் பெரியம்மா " பதவிசாக கூறினாள் சபர்மதி .

" ம் ...சரி...சரி ..இந்த இம்சையெல்லாம் என்னிடம் வராமல் பார்த்துக்கொண்டால் சரி .அப்புறம் நம் வேலையாட்கள் எல்லோரும் நம்மிடம் பத்து வருடங்களுக்கு மேல் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். ரொம்ப விரட்டிட வேண்டாம் ..."

" கண்டிப்பாக பெரியம்மா நான் பார்த்துக்கொள்கிறேன். காலை எட்டு முப்பதுக்கெல்லாம் சாப்பிட வந்திடுங்க ",

" ம்...ம்..." முணுமுணுத்தபடி கிளம்பினாள் அம்சவல்லி .

" அசத்திட்டம்மா " பாராட்டினார் சத்யேந்திரன் .மற்ற வேலையாட்களையும் கொஞ்சம் கவனிம்மா ."

சரிப்பா என கிளம்பியவள் அடுப்பங்கறையை எட்டிப்பார்த்து , காலை சமையலை உறுதி பண்ணி விட்டு, வெளியே வந்து குப்பையாக கிடந்த வீட்டை பார்த்தாள் .நிறைய வேலை இருக்கிறது இங்கே .இந்த சன்னல் திரைகளை முதலில் மாற்ற வேண்டும் .மாட்டி மாமாங்கம் கழிந்திருக்கும் போலவே .இந்த பர்னிச்சர்களை கொஞ்சம் இடம் மாற்றி போடலாம். அதோ அங்கே ஒரு ஊஞ்சல் போடலாம். இங்கே ஒரு பித்தளை பாத்திரத்தில் நீர் நிரப்பி மலர்களை மிதக்க விடலாம் .தனக்குள்ளாக கணக்கு போட்டாள் .

தடதடவென யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டு , சுதாரித்து திரும்பும் முன் பலமாக அவள் மேல் வந்து மோதினான் தர்மன் .

" தங்கச்சி ...தங்கச்சி ...எனக்கு வேண்டாம் காப்பாற்று ...".

பின்னாலேயே கையில் ஒரு டம்ளருடன் அனுசூயா .

" என்ன அனுசூயா இது ..."
" மருந்து சபர்மதி ...வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் ....இவர் தினமும். அடம் பிடிக்கிறார் ."

" கொடு ...மருந்தை வாங்கியவள் " அண்ணா நான் உங்கள் செல்ல தங்கையில்லையா ....நான் சொன்னால் கேட்பீர்களாம் ..இப்போது இந்த மருந்தை கண்ணை மூடிக்கொண்டு குடித்தால் உங்களை நான் வெளியே கூட்டிப் போவேன் சரியா "

கண்கள் விரிய "நிஜம்மாவா " என்றான் தர்மன் .

" நிஜம்ம்ம்மா...." உறுதியளித்தாள்  சபர்மதி .
..
மடக்மடக்கென மருந்தை வாங்கி குடித்தவன் , "ம்...வா...போகலாம் " என்றான் .

"ம்ஹும்...நான் இப்போ வெளியே போகிறேன் .நீங்கள் குளித்து , சாப்பிட்டு தயாராக இருங்கள் .நான் வந்து அழைத்து சொல்கிறேன் " என்றவள் தர்மனின் குளியல் மற்ற தேவைகளுக்காக அமர்த்ப்பட்டிருந்த 
.மணியனை நோக்கி கைகாட்டி அவனிடம் தர்மனை ஒப்படைத்தாள் .

ஓரமாக நின்றிருந்த அனுசூயாவை நோக்கி , " நீயும் குளித்து சாப்பிடு அனுசூயா .காபி குடித்தாயா ?விசாரித்தாள் .

" இல்லை இன்னும் அவர் வெறும் வயிற்றுடன் தானே இருக்கிறார் .அவர் குளித்து சாப்பிட்டதும் தான் நானும் " என்றபடி சென்றாள் .
ஏதோ புரிதலுடன் அவள் முதுகு பார்த்து நின்றாள் சபர்மதி .

வீடு சுத்தம் செய்யும் பெண்ணிடம் சில விபரங்கள் சொல்லியபடி இருந்தாலும் , சபர்மதியின் கண்கள் அடிக்கடி கடிகாரத்தையே சுற்றிசுற்றி வந்தன .பன்னிரெண்டு மணிக்கு பூரணனை சென்று பார்க்க  வேண்டுமே .குனிந்து சிறு யோசனையுடன் தன் உடையை பார்த்தாள் .சாதாரண சுடிதார் .சபர்மதிக்கு போடுவதற்கு கூட இல்லாமல் ஒரு நாலு செட் உடைகளை மட்டும் விட்டு விட்டு எல்லாவற்றையும் பெருந்தேவி எடுத்து சென்று விட்டாள் .
இங்கே வரும் முன் தேவையான உடைகள் வாங்கிக்கொள்ளுமாறு தீபக்குமார் ஒரு பிரபல கடையில் காரை நிறுத்தினான் .

தன்னை நோக்கி வந்த வாய்ப்புக்கு காரணம் யார் என்னவென்று தெரியாத அந்நிலையில் அதிக உடைகள் வாங்க மனமற்று குறைந்த விலையில் ஆறு செட் சுடிதார்களும் உள்ளாடைகளும் மட்டும் வாங்கியிருந்தாள் .இவ்வளவு நாட்களாக அவற்றையே அணிந்து வந்திருந்தாள் .அந்த உடைகள் இனி ...தனக்கு ஒத்து வராது என்று இப்போது தோன்றியது .

அப்போது வெளியே கிளம்ப தோதாக கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள் அம்சவல்லி .அவளிடம்

" வெளியே கிளம்பிட்டீங்களா பெரியம்மா ...காலையில் சாப்பிட்டீர்களா ?"

" ம்...ம்...என்ன விசயம் " நேரடியாக அவளை பார்க்காமல் திரும்பி நின்றபடி கேட்டாள் அம்சவல்லி .

"எனக்கு கொஞ்சம் நல்ல உடைகள் வாங்க வேண்டும் பெரியம்மா .இங்கே கடைகள் விபரம் எனக்கு தெரியாது.அதுதான் உங்களிடம் கேட்கலாமென ...."

பேசிக்கொண்டு இருக்கும் போதே " சரி சரி பார்க்கிறேன் " என்றபடி வெளியேறி விட்டாள் அம்சவல்லி .
இது விசயமாக ஏதாவது செய்வார்களா ..இல்லையா ..ஒரு நிமிடம் நினைத்தவள் ...சரி செய்யவில்லைறென்றால் பிறகு யோசிக்கலாம் அதை ...இப்போது தலைக்கு மேல் வேலை ..

காலை உணவுக்கு பின் மதிய  உணவுக்கு மெனு சொல்லிவிட்டு , சத்யேந்திரனின் ஏற்பாட்டின்படி காரில் டிரைவருடன் பூரணசந்திரனை  காண புறப்பட்டாள் .
மிகப்பெரிய பங்களா டைப் வீடு .உள்ளே நுழைகையிலேயே நீரூற்று ஒன்று குளிர்ச்சி பரப்பியபடி இருந்தது .வெண்ணையை பரப்பியது போன்ற மார்போனைட் கற்கள் .செருப்புகளை வாசலில் சுழற்றி விட்டு , கால்களை மென்மையாக தரையில் பதித்து உள்ளே நுழைந்தாள் சபர்மதி .ஏதோ ஓர் அமைதி மனதினுள் குடி கொண்டது .கோவிலுக்குள் நுழைந்தது போன்ற நிறைவு .பாசிட்டிவ் வேவ்ஸ் இந்த வீட்டில் நிறைய இருக்கிறது என் எண்ணிக்கொண்டாள் .அவைதான் மனதுக்கு இத்தனை அமைதியை தருகின்றன என்று எண்ணினாள் .


உயர்ரக போட்டோ பிரேமிற்குள் சந்தனமாலை அணிந்த ஒருவர் படம் .பூரணனின் தந்தை .இவர் ....இவர் மரணத்திற்கு காரணம் என் தந்தை .
அமைதி தவழ்ந்த மனதை இந்த ஞாபகங்கள் கறைபடுத்தின .கடவுளே இந்த நினைவே எனக்கு இல்லையே ...நான் எப்படி பூரணனின் அன்னையை எதிர்கொள்வேன் .அவர் என்னை ஏற்றுக்கொள்வாரா ?....
உள்ளம் நிறைய குழப்பத்தோடு   நின்றபோது " சபர்மதி ...." எனும் ஆசசர்யகுரல் ....

முன்னுச்சியில் கௌரவ நரையுடன் தங்க ப்ரேம் கண்ணாடியுடன் ,  பவளமாலை அணிந்த சிவந்த நிற பெண் .வந்து என்னுள் அடங்கிக்கொள்ளம்மா எனும்படியான ஆதரவான தோற்றம் .பூரணசந்திரனின் அன்னை என அறிமுகப்படுத்த ஆள் தேவையில்லை சபர்மதிக்கு .தானாகவே குவிந்த கரங்களுடன்  அவரை நாடி சென்றவள் பாதம் பணிந்தாள் .

எழுப்பி என்னை அணைத்துக்கொள்ள மாட்டாரா என நினைக்கையிலேயே , தோள் பற்றி தூக்கியவர் அவளை அணைத்துக்கொண்டார் .சபர்மதியின் குழப்பங்களுக்கு தேவையே இல்லை என்பதனை தன் செயல்களில் நிரூபித்தபடி

" எப்படியம்மா இருக்கிறாய் ...நீ இன்று வருவதாக எனக்கு தகவல் வரவில்லையே ?" எனக் கேட்டார் சுந்தரவடிவு .

" நன்றாக இருக்கிறேனம்மா ..." சொல்லும்போதே என்னை இவருக்கு தெரியுமா ? எனும் எண்ணமும் தோன்றியது .

" நான் உனக்கு பாட்டி முறை வருமம்மா ....அம்சவல்லி எனக்கு மகள் முறையாயிற்றே ...நீ...பாட்டியென்றே கூப்பிடு ",என்றார் .

"சரி பாட்டி ...என்னை உங்களுக்கு தெரியுமா ..."

மெல்ல சிரித்தபடி "தெரியுமாவா ...இந்த வீட்டில் இருக்கும் புல் ...பூண்டிடம் கூட உன்னை பற்றி சொல்லி வைத்திருக்கிறான் பூரணன் .எனக்கு தெரியாதா " என்றார் .

"ஓ..." சபர்மதியின் கன்னங்கள் சிவந்தன .

அவளை சோபாவில் அமர வைத்து கைகளை பற்றியபடி ,அவள் படிப்பு மற்ற விசயங்களை கேட்டார் .சபர்மதியின் இதழ்கள்தான் அவருக்கு பதிலளித்தது .மனம் பூரணனையே சுற்றிக்கொண்டிருந்தது .அவன் எப்போது வரக்கூடும் .சாப்பிட வர இவ்வளவு நேரமா ? இருக்கட்டும் நான் இந்த வீட்டுக்கு வந்ததும் காதைப்பிடித்து திருகி , நேரத்திற்கு உணவுண்ண வர வைக்கிறேன் , இப்படி நினைத்தபடி கற்பனையில் பூரணனின் காதை பற்றிக்கொண்டிருந்தவளை ,தோள் பற்றி சுந்தரவடிவு ஏதோ கேட்டாள் .

" எ...என்ன பாட்டி ....என்ன கேட்டீர்கள் ?,"....

" சரிதான் போ ....சாப்பிட போகலாமா என மூன்றாவது தடவையாக கேட்டு விட்டேன் .என்னம்மா நினைவில் இருக்கிறாய் ?"

சாப்பாடா ....பூரணன் வரும் முன்பா ...." இல்லை பாட்டி சும்மா ஏதோ நினைவு ....சாப்பாடு பூரணன் வந்ததும் சாப்பிடலாமே பாட்டி '"

ஒரு நிமிடம் மௌனமாக இருந்த சுந்தரவடிவு பின் மெல்ல கேட்டார் ." பூரணனை எப்போது பார்த்தாயம்மா"

நேற்று ...நேற்றுதானே ....சபர்மதிக்கு என்னவோ தன்  மனங்கவர்ந்தவனை  பார்த்து பல யுகங்கள் ஆனது போலவே இருந்தது .ஆனால் நேற்றுதானே பார்த்தாள்

" உன்னிடம் பூரணன் ஒன்றும் சொல்லவில்லையாம்மா "

ஏதோ தனக்கு பிடிக்காத செய்தியொன்று வரப்போவதாக சபர்மதிக்கு தோண ஆரம்பித்து விட்டது .

'" இல்லையே பாட்டி ..ஏன் ...என்ன விசயம் ..." குரல் மெலிதாக நடுங்க தொடங்கியது .

" போனில் கூட பேசவில்லையாம்மா "

" இல்லையே ...என்னாச்சு பாட்டி ..."

" உங்களுக்குள் ஏதாவது பிரச்சனையா ....?"

" ஐயோ பாட்டி .அதெல்லாம் ஒன்றும் இல்லை ...என்னவென்று சொல்லுங்களேன் ...ப்ளீஸ் "

சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி பார்த்தவர் " ஐந்து மணி நேரம் ஆகி விடுமே ...முடியுமா "  என தனக்குள் கேட்டுக்கொண்டார்க.சபர்மதியின் கைகளை பற்றி இழுத்தபடி எழுந்தவர் " வா " என்று வாசலுக்கு அழைத்து சென்றார் .வாசலில் நின்று  " மணி நம்ம பெரிய கார் தயாராக இருக்கிறதா " என சத்தம் கொடுத்தார் .

" எப்பவும் தயாராக இருக்கனும்னுதானே ஐயா சொல்வார் .தயாராக இருக்கும்மா " டிரைவர் பதிலளித்தான் .

" காரை எடுத்துட்டு வா " சொல்லிவிட்டு சபர்மதியின் பக்கம் திரும்பி " உன் கார் வேண்டாம்மா .அது சிறியது .நம் வண்டியில் போய்விடு "என்றார் .

"எங்கே பாட்டி "

"பூரணன் அவனோட வெளிநாட்டு பயணத்தை நேற்றே தொடங்கி விட்டான் மதிம்மா .அடுத்த வாரமாக இருந்த அவனது பயணம் பத்து நாட்களுக்கு முன்பே இன்று மாற்றப்பட்டுவிட்டது .நேற்று இரவே கோயமுத்தூர் புறப்பட்டு சென்று விட்டான் .இன்று இரவு ஏழு மணிக்கு அவனுக்கு கோவையில் மும்பைக்கு விமானம் .அங்கிருந்து சிங்கப்பூர் ...
என்று அவனது பயணம் தொடங்கிவிட்டது .நீ இப்போது கிளம்பினால் அவனை கோவை விமானநிலையத்தில் பிடித்து விடலாமென நினைக்கிறேன் .போய் நேரில் பேசி விடை கொடுத்து வாம்மா ...கிளம்பு "

அதிர்ந்து நின்ற சபர்மதியை தள்ளி 
காரில் அமர வைத்தவர் "மனம் விட்டு பேசி விட்டால் எந்தப்பிரச்சினையும் தீர்க்க கூடியதுதான்மா .பூரணன் இப்போது சென்றால் திரும்பி வர ஒரு வருடமாகும் .எனவே நீங்கள் இருவரும் பேசியே ஆகவேண்டும்மா "
டிரைவரிடம் திரும்பி " ஜாக்கிரதை மணி ...பத்திரமாக அழைத்து சென்றுவிட்டு வா " என்று அனுப்பி வைத்தார் .

அப்படியானால்  பூரணன் அன்று ....அவளை மணக்க கேட்ட அன்று இந்த பயணதிட்ட மாறுதல் தெரிந்துதான் வந்தானா ? அதனால்தான் அன்று அவளிடம் நின்று பேச முடியாத அவசரமா ? தன் தந்தையிடம் சம்மதம் பெற்று தன்னை திருமண நிச்சயம் செய்துகொள்ள எண்ணியிருக்கலாமோ ? ....முருகா ...ஏதேதோ பேசி அன்று அவனை விரட்டி விட்டேனே ...இனி என்ன செய்ய மனதுக்குள்ளேயே துடித்தாள்  
மனம் வெறுத்து சென்றுவிட்டானோ ...அதனால்தான் தந்தையிடம் கூட இது விபரம் ஒன்றும் தெரிவிக்கவில்லையா? என்னைக்காப்பாற்றிய அன்று கூட என் பக்கம் திரும்பியும் பார்ககவில்லையே ....ஒருவேளை என்னை வெறுத்து விட்டானோ ?...்
இல்லை என்னுடைய  பூரணன் என்னை  அப்படி விட்டுவிட மாட்டான் .

அன்று அவ்வளவு பேசிய பிறகும் என்னுடைய  நடமாட்டங்களை கவனித்து , அந்த ரவுடிகளிடமிருந்து காப்பாற்ற ஓடி வந்தானே ...ஏதோ சிறு மனக்குறை .அதனை இதோ இப்போது நான் நேரில் சென்று பேசி சரி செய்து விடுவேன் .சந்தோசமாக அவரை வழியனுப்பி வைப்பேன் .இந்த எண்ணத்துடன் கோவைக்குள் கார் நுழைந்ததும் ஒரு கடையில் நிறுத்தி பூரணனுக்காக ஒரு பொக்கே கூட வாங்கிக்கொண்டாள் சபர்மதி .

ஆனால் பூரணன் ....



                                                                                                                                             -                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    தேவதை வருவாள்.

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll